Skip to main content

பாஜகவின் அகந்தைக்கு மக்கள் கொடுத்திருக்கும் எச்சரிக்கை!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

மகாராஸ்டிரா பேரவைக்கு 2014ல் நடந்த தேர்தலில் பாஜக தனித்து சில சில்லறைக் கட்சிகளை சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது. 260 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 122 இடங்களை கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக வந்தது. பதிவான வாக்குகளில் 27.8 சதவீதம் வாக்குளை பெற்றது. சிவசேனாவும் தனித்தே 282 தொகுதிகளில் போட்டியிட்டு 63 இடங்களில் வெற்றிபெற்றது. பதிவான வாக்குகளில் 19.3 சதவீதம் வாக்குகளை பெற்றது. காங்கிரஸ் கட்சி தனித்து 287 தொகுதிகளில் போட்டியிட்டு 42 தொகுதிகளையும் பதிவான வாக்குகளில் 18 சதவீதத்தையும் பெற்றது. தேசியவாத காங்கிரஸ் தனித்து 278 தொகுதிகளில் போட்டியிட்டு 41 தொகுதிகளையும் 17.2 சதவீத வாக்குகளையும் பெற்றது.

 

ஹரியானா மாநிலத்தில் 2014 சட்டப்பேரவை தேர்தலில் அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக 47 இடங்களையும் 33.2 சதவீத வாக்குகளையும் பெற்றது. அகாலிதளம் 1 இடத்தை பெற்றது. முந்தைய தேர்தலில் 40 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 15 தொகுதிகளையும் 20.6 சதவீத வாக்குகளையும் பெற்றது. முந்தைய தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 31 இடங்களைப் பெற்ற இந்திய தேசிய லோக்தளம் 2014 தேர்தலில் 19 இடங்களையும் 24.1 சதவீத வாக்குகளையும் பெற்றது.

 

ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் 2 இடங்களையும் 3.6 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்தையும் 4.4 சதவீத வாக்குகளையும் பெற்றன. 2014 தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாததால் பாஜக வெற்றிபெற்றதை காணமுடியும். அதாவது மொத்தம் 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று 47 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. அதாவது, பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவு இல்லாமலேயே ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது.

 

2014ல் நடைபெற்ற மகாராஸ்டிரா, ஹரியானா தேர்தல்களுடன் 2019 சட்டப்பேரவை தேர்தல்களை ஒப்பிட்டால் பாஜகவின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முடியும். 2019 மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற மோடியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் மக்கள் சரியான பதிலை அளித்திருப்பதாகவே கருத வேண்டும்.

haryana and Maharashtra assembly election bjp peoples support

 

வெற்றிபெற்றதைப் போன்ற தோற்றத்தையும், மக்கள் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்ற பில்டப்பை மோடி ஊடகங்கள் மூலம் உருவாக்கினாலும், உண்மை நிலை அதற்கு மாறாக இருப்பதை மோடியும் அமித்ஷாவும் உணர்ந்தே இருப்பார்கள். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் மோடி இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் என்பதே நிஜம்.

 

நடந்து முடிந்த மகாராஸ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த முறை தனித்தனியே போட்டியிட்ட பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதுபோலவே, காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த போட்டியில் கடந்த முறை 122 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இம்முறை 105 இடங்களையும் 25.8 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது. சிவசேனாவோ, 56 இடங்களையும் 16.4 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றிருக்கிறது.

 

இதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும் 15.9 சதவீத வாக்குகளையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் 16.7 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கிறது. சுயேச்சைகளும் சிறியகட்சிகளும் சேர்த்து 29 இடங்களையும், 25.2 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.

 

ஆகமொத்ததில் இந்தமுறை பாஜக கூட்டணி 42 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு எதிராக 58 சதவீதம்பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்பதே நிஜம். பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கத்தில் சரிபாதி இடங்களையும் துணை முதல்வர் பதவியையும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை இப்போதே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்வைத்திருக்கிறார். அத்துடன் ஆட்சியையும் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்துகொள்ளவும் நிபந்தனை விதிப்பார் என்று தெரிகிறது.

haryana and Maharashtra assembly election bjp peoples support

 

பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் சிவசேனாவை எதற்கெடுத்தாலும் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை மறைக்கப் பார்க்கிறார் மோடி. ஆனால், மகாராஸ்டிராவில் ஐந்து ஆண்டுகள் அரசியல் நிலைத்தன்மை கெடும் என்பதும், எதிர்க்கட்சிகளின் கை பேரவையில் ஓங்கியிருக்கும் என்பதும் உண்மை.

 

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் அகந்தைக்கும், தேசியவெறியேற்றும் போக்கிற்கும் மக்கள் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நாடுமுழுவதும் நிலவும் பொருளாதார மந்தநிலை, வளர்ச்சி, விவசாயிகள் பிரச்சனை என்று எதையும் பாஜக விவாதிக்க மறுத்தது. மாறாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததையும், தேசிய குடியுரிமை பரிசீலனை சட்டத்தையும் தனது சாதனையாக மோடியும் பாஜக தலைவர்களும் முழங்கினார்கள்.

 

ஆனால், 18 மாநிலங்களில் பரவிய 51 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக பலத்த அடி வாங்கியதையும், இரண்டு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவும் அந்தக் கட்சியின் சர்வாதிகார மனப்பான்மைக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

 

ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாஜகவின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையையும், தேசிய வெறியையும் பெரும்பான்மையான மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். இனியேனும் பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தனது போக்கை பாஜக திருத்திக்கொள்ளுமா என்பது போகப்போகத்தான் தெரியும். காங்கிரஸையோ, மற்ற மாநில கட்சிகளையோ மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்ற பாஜகவின் விருப்பத்துக்கும் சேர்த்தே இந்தத் தேர்தல்கள் மரண அடி கொடுத்திருக்கின்றன. மொத்தத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக துடைத்தெறியப்படும் என்பதையே இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றன.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.