Skip to main content

காவிரி நதிநீர் விவகாரம்; தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க பரிந்துரை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Cauvery water issue Recommendation to open water to Tamil Nadu

 

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நேற்று முன்தினம் (09.10.2023) கூடியது. அப்போது காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதனையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் டெல்லியில் இன்று (11.10.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் காணொளி வாயிலாகத் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் இந்தக் கூட்டத்தின் போது 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடகாவில் மழை குறைவாகப் பெய்துள்ளதால் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாத சூழல் இருப்பதாகக் கர்நாடக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை என தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 16 நாட்களுக்கு நீர் திறக்கக் கர்நாடகாவுக்கு உத்தரவிடக் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்