Skip to main content

நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

KANIMOZHI

 

பெண்களின் குறைந்த பட்ச திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த குழந்தை திருமணத் தடுப்பு சட்ட (திருத்த) மசோதா 2021-ஐ மக்களவையில் தாக்கல் செய்தார்.

 

இதற்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. மசோதா தாக்கலைத் தொடர்ந்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, "அவசரமாக வேலை செய்யும்போது தவறுகள் நடக்கும் என்று அரசுக்கு அறிவுறுத்த விரும்புகிறோம். இந்தியாவில் இதுதொடர்பாக (பெண்களின் திருமண வயதை உயர்த்துவது) பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு எந்த பங்குதாரர்களுடனும் பேசவில்லை. எந்த மாநிலத்துடனும் ஆலோசனை நடத்தவுமில்லை. இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோருகிறோம்" எனத் தெரிவித்தார்.

 

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சவுகதா ராய், "அவசர அவசரமாக அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளதை நான் எதிர்க்கிறேன். இந்த மசோதா குறித்து அனைத்து பங்குதாரர்களுடனும் விவாதம் நடத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் இந்த மசோதாவை முற்றிலும் எதிர்க்கிறார்கள்" என்றார்.

 

ஒவைஸி பேசுகையில், "இது பிற்போக்கான திருத்தம். இது சட்டப்பிரிவு 19 இன் கீழ் சுதந்திரத்திற்கான உரிமைக்கு எதிராகவுள்ளது. 18 வயதுடையவர் பிரதமரைத் தேர்ந்தெடுக்கலாம், லிவ்-இன் உறவில் ஈடுபடலாம். ஆனால் திருமணத்திற்கான உரிமையை நீங்கள் மறுக்கிறீர்கள். 18 வயதுடையோருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? சோமாலியாவை விட இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு குறைவு" எனக் கூறினார்.

 

தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, "தொடர்ந்து 2வது அல்லது 3வது முறையாக, அவர்கள் (அரசு) தீவிரமாக மசோதாக்களைக் கொண்டு வருகிறார்கள். எதிர்க்கட்சிகளில் யாரிடமும் கலந்தாலோசிக்கப்படுவதில்லை. அலுவல் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்படும் எதுவும் அவையில் ஒருபோதும் செயல்படுத்தப்படுவதில்லை. அரசின் இந்த புதிய நடைமுறையை நான் கண்டிக்க விரும்புகிறேன்" என்றார்.

 

அதே திமுக எம்.பி கனிமொழி, "பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தவிர்த்து, மற்ற எதற்கும் யாரையும் கலந்தாலோசிப்பதில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. இத்தகைய முக்கியமான மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கோ அல்லது தேர்வுக் குழுவுக்கோ அனுப்பப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது. அவர்கள் மசோதாவை மறுபரிசீலனை செய்து சிவில் சமூகத்தில் கருத்துக்களைக் கேட்டு பின்னர் மசோதாவைக் கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

 

இதனையடுத்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்புமாறு மக்களவை சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து குழந்தை திருமணத் தடுப்பு சட்ட (திருத்த) மசோதா 2021 நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.