Skip to main content

பாலியல் புகாரில் சிக்கிய ஜே.என்.யூ. பேராசிரியர் கைது!

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

பாலியல் புகாரில் சிக்கிய ஜவஹர்லால் பல்கலைக் கழக பேராசிரியர் அதுல் ஜோரி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

JNU

 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸ் பிரிவில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் அதுல் ஜோரி. இவர் பெண் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், அவர்மீது ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஆனால், அவர்மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் செல்வாக்கு மற்றும் கல்லூரியில் உள்ள பல்வேறு நிர்வாகங்களில் பொறுப்பு வகிப்பவர் என்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதாக புகார்கள் எழுந்தன.

 

இதனால் ஆத்திரமடைந்த பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தெற்கு டெல்லியின் வசந்த் குஞ்ச் காவல்நிலையத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

 

அதுல் ஜோரி மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரி உறுதியளித்த நிலையில், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். தற்போது அதுல் ஜோரி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இரவுக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்