தமிழ்நாட்டில் இருந்து பிழைக்க வழியின்றி ஆந்திரப்பிரதேசம் காடுகளில் செம்மரம் வெட்டப்போய், பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர் அப்பாவி தமிழர்கள். இவர்களில் கடந்த 2015ஆம் ஆண்டு சித்தூரில் ஆந்திர வனத்துறையினர் சித்தரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களும், சில தினங்களுக்கு முன்பு கடப்பா ஏரியில் பிணங்களாக மிதந்த ஐந்து தமிழர்களும் என செம்மரம் வெட்டப்போய் எதிர்காலத்தையே தொலைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
![kadappa](http://image.nakkheeran.in/cdn/farfuture/ocDioeLUIHSfgEJwOL7deQtvOvVwZ0llbzzT3NY6T3k/1533347632/sites/default/files/inline-images/Red-wood.jpg)
அவர்களில் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களின் படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை வெளியிட்டிருக்கிறது ஆந்திர வனத்துறை. ஆந்திர வனத்துறை வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திராவில் செம்மரம் வெட்டச்சென்றவர்களில் 10,664 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2017ஆம் ஆண்டு டிசம்பர் வரை 10,558 தமிழர்களும், இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து 106 பேரும், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 80 பேரும் ஆந்திர வனத்துறை, செம்மரக்கட்டைத் தடுப்புப் படை உள்ளிட்டவற்றால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மொத்த எண்ணிக்கையில் 20 சதவீதம் பேர் திருவண்ணாமலை, சேலம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.