Skip to main content

“மண் வளத்தை காக்க புதிய திட்டம்” - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  தாக்கல் செய்தார். இதனையடுத்து அவர் பேசியதாவது, “2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது. 

கடந்த டிசம்பரில், தென்மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட 6 கோடி மானியம் வழங்கப்படும். பூச்சி மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வரும் நிதியாண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. மண்வளத்தை பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர் வேளாண்மை போன்ற அனைத்து செய்முறைகளையும் ஊக்கப்படுத்த ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு 6.27 கோடி நிதி ஒதுக்கீடு. மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் வழிவகுத்துள்ளது. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பஞ்சகவ்யம், மண்புழு  உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிறிய, பெரிய நாற்றங்கால் அமைக்க வேளாண் காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும். ஒருங்கிணைந்த பண்ணை தொடங்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

Minister MRK Panneerselvam says Government will procure agricultural produce

வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ வகைகளை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வளர்க்க ஊக்கிவிக்கப்படும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும். எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  ரூ. 5 கோடி மாநில நிதியில் 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்தப்படும். தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி, விவசாயிகளுக்கு கொடுக்க ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அனைத்து பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நோக்கில் 4,75,000 பரப்பில் அதிகரிக்க ரூ.40.27 கோடி ஒன்றிய மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சூரியகாந்தி பயிர் விரிவாக்கத்திற்கு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் உற்பத்தி தரமான விதைகளை பயன்படுத்தினால் 15% மகசூலை அதிகரிக்கலாம். மொத்தம் 15, 810 விதை வகைகளை 50 முதல் 60% தள்ளுபடியில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். துத்தநாகம் ஜிப்சம் வாங்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும். 2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். “ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம்பெறும். நிரந்தர பூச்சி கண்காணிப்புத் திடல்கள் அமைக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடினத்தைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு 20% கூடுதல் மானியம் வழங்கப்படும். பருத்தி சாகுபடி பெருக்கத்தை அதிகரிக்க 14.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வர ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

விசிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Release of special election report

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரத்தில் உள்ள ஜெயங்கொண்டபட்டிணம் என்ற இடத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். இந்த தேர்தல் அறிக்கையில், “வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்ட திருத்தங்கள் நீக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். டாகர்.அம்பேத்கர் பிறந்தநாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தப்படும்.

இந்திய தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை பிரச்சனையில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். தமிழக ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கக் கூடாது. மின்னணு வாக்கு எந்திரத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.

பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்கப்படும். உயர் சாதியினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு வழியாக தமிழை அறிவிக்க வேண்டும். பாசிச சக்திகளை அகற்றுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும். இந்துத்துவ சக்திகளால் பாதிக்கபட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை விசிக மேற்கொள்ளும். காஷ்மீர் பிரச்சனை அடிப்படையில் இந்திய அரசின் வெளியுறவு கொள்கை தீர்மானிக்கப்படக் கூடாது.

ராமர் கோயில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். ராமர் கோயில் திறப்பு விழா நடந்துள்ள நிலையில் நீதிமன்ற ஆனைப்படி மசூதிக்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை அவசியம் எடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதில் பொது மக்களும் பங்கேற்கும் வகையில் அதற்கான கண்காணிப்புக் குழுவையும் உருவாக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் விசிக குரல் எழுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“சின்னத்தை முடக்க முயற்சிப்பது மோடியின் மோடி மஸ்தான் வேலை” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister MRK Panneerselvam criticized BJP

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.

முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.

திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.