Skip to main content

குவைத் முகாமில் தமிழர்கள் மீது தடியடி: மன உளைச்சலால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை: விரைந்து மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 26/05/2020 | Edited on 27/05/2020

 

ramadoss


குவைத் நாட்டின் மாங்காஃப் (Mangarf) என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு நேற்றிரவு உணவு வழங்கப்படவில்லை என்றும் தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியதால், தமிழர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், தனிமைப்படுத்தப்பட்டு, முட்டிப் போட வைத்து, அவமானப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தாயகம் திரும்ப முடியாமல் 50 நாட்களுக்கும் மேலாகத் தவிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக குவைத் நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குவைத் பொதுமன்னிப்பு முகாமில் உணவு வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது அந்நாட்டு காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மற்றொருபுறம் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களைத் தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
 

குவைத் நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, தாயகத்திற்கு அனுப்பத் தயாராக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குவைத் நாட்டின் மாங்காஃப் (Mangarf) என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு நேற்றிரவு உணவு வழங்கப்படவில்லை. இதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்ற சிலர், தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், இதில் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உணவு கிடைக்கவில்லை என்று புகார் கூறியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, முட்டிப் போட வைத்து, அவமானப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

மற்றொருபுறம், அரிதியா என்ற இடத்தில் உள்ள மகளிருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களை உடனடியாகச் சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை உணவு அருந்த மாட்டோம் என்றும் கூறி கடந்த 3 நாட்களாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அம்முகாமில் இருந்த ஒரு பெண்ணுக்குச் சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு முகாம்களில் பெரும் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.
 


குவைத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இந்தியத் தொழிலாளர்களில் 7,340 பேர் முகாம்களிலும், சுமார் 5,000 பேர் முகாம்களுக்கு வெளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து 50 நாட்களுக்கும் மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 7-ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான விமான சேவைகள் இயக்கப்படும் நிலையில், குவைத்தில் உள்ள இந்தியர்களில் சுமார் 4,000 பேர் இதுவரை தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் கடந்த 10-ஆம் தேதி குவைத்திலிருந்து சென்னைக்கு இயக்கப் பட்ட விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 186 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அதன்பின் கடந்த 16 நாட்களாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட, சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படவில்லை.
 

குவைத் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கேரளத் தொழிலாளர்களும், ஆந்திரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை அழைத்துச் செல்ல விமானம் இயக்கப்படாததால் தமிழர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மே 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலான இரண்டாம் கட்ட வந்தே பாரத்  இயக்கத்தின்படி, குவைத் உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மே 23-ஆம் தேதிக்கு பிறகாவது குவைத்திலிருந்து தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படும்; அவற்றில் தாயகம் திரும்பலாம் என்றும் தமிழர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூன் மாத இறுதி வரை விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே நிலவும் ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் அதிகப்படுத்தியிருக்கிறது.
 

தாயகம் திரும்ப முடியாமல் 50 நாட்களுக்கும் மேலாகத் தவிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகத் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தமிழர்களை மீட்க விமானங்கள் இயக்கப்படாவிட்டால், மன உளைச்சல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடும். மற்றொருபுறம் குவைத் நாட்டில் இன்று வரை 21,967 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆயிரம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். பொதுமன்னிப்பு முகாம்களில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அங்கு எளிதாக கரோனா வைரஸ் பரவக் கூடும் என்ற அச்சமும் தமிழகத்தினரிடையே நிலவி வருகிறது.
 

http://onelink.to/nknapp

 

குவைத்தில் பொதுமன்னிப்பு முகாம்களில் சுமார் 450 பேர், வெளியில் 250 பேர் என தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக இரு விமானங்கள் மூலம் அவர்களைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து விட முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல், சிறப்பு விமானங்களை இயக்கி குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக மத்திய அரசுக்குத் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.