Skip to main content

எ.வ.வேலுவுக்கு எதிராக பேசியவர் தற்காலிகமாக நீக்கம்... துரைமுருகன் அறிவிப்பு...

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

ddd

 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிட்டே ஆக வேண்டும் என முடிவு செய்த திருவண்ணாமலை தெற்கு மா.செ.வான முன்னாள் அமைச்சர் மா.செ.வேலு, இதற்காக தொகுதியின் பொறுப்பாளராக, தனது மகனும் மருத்துவரணி மாநில துணைத்தலைவருமான டாக்டர் கம்பனை சில ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கினார்.

 

இந்த நிலையில் எ.வ.வேலு ஆதரவாளர்கள் சிலர், கம்பனை அங்கு வேட்பாளராக்க வேண்டும் என முடிவு செய்தனர். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அந்த தொகுதியில் சீட்டை எதிர்பார்த்த திமுக பிரபலங்கள் மறைமுகமாகப் புலம்பத் துவங்கினார்கள். 

 

எ.வ.வேலு குறித்தும், அவரின் மகனும் கம்பன் குறித்து தானிப்பாடி பகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகியான இளைஞர் ஒருவரிடம், மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரசேன் செல்ஃபோனில் பேசியது வைரலாகி அதகளப்படுத்தியுள்ளது. 

 

அந்த ஆடியோவில், "கட்சியில் 45 வருஷமா இருக்கன். எ.வ.வேலு பேசும்போது என் பெயரைச் சொல்றார், எவனும் கை தட்டமாட்டேன்கிறான். இன்னும் கட்சியில வந்து ஒன்னும் புடுங்கல. அப்பன் நிழலில், பாதுகாப்பில் இருக்கிற வேலு மகன் கம்பன் பெயரைச் சொன்னால் கைதட்டறான். வேலு, காலேஜ், நிலம், ஸ்பின்னிங் மில், கிரானைட் கம்பெனி, பைனான்ஸ் வச்சியிருக்கார். இவ்வளவு தொழில் செய்றாரு, அதில் போய் அவரது மகன் கம்பன் வளர்ந்துட்டுப் போகட்டும். கட்சிக்கு வந்து ஏன் மத்தவங்க பிழைப்பை கெடுக்கணும்? கட்சியில எத்தனை பேரு உழைக்கறான், அவனெல்லாம் மேலே வரலாம்மே. அப்பன், புள்ளதான் பதவிக்கு வரனும்மா? கலைஞரா இருந்தாலும் சேர்த்துதான் சொல்றேன். தகுதியின் அடிப்படையில் வான்னு சொல்றேன், வரவேண்டாம்னு சொல்லல. தி.மு.க.காரன் புள்ள தி.மு.க.வை விட்டு வேறு எந்த கட்சிக்குப் போய்டுவான்” எனச் சொல்வதோடு கட்டாகிறது. 

 

ஆடியோ விவகாரம் பரபரப்பானதும் சுந்தரேசன் குறித்து தலைமைக்குப் புகார் சென்றுள்ளது என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’யில், ஒழுங்கு நடவடிக்கை தலைமைக் கழக அறிவிப்பு என்ற பெயரில், ''திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்'' என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்