
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆன்மீக திருவிழாவான ‘மகா கும்பமேளா’ கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற்றது. மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
மகா கும்பமேளாவிற்கு வருவதற்காக சாலை விபத்துகள், டெல்லி ரயில் கூட்ட நெரிசல் போன்ற இன்னல்களையும் பக்தர்கள் சந்தித்தனர். பல சுவாரஸ்ய நிகழ்வுகள் இந்த மகா கும்பமேளாவில் நடந்தாலும், சில துயர சம்பவங்களும் நடந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மகா கும்பமேளாவில் ஜனவரி 29ஆம் தேதியன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 37 பேர் உயிரிழந்ததாகவும், பலரும் காயமடைந்ததாகவும் அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.கும்பமேளாவில் 66 கோடி மக்கள் வந்து, பங்கேற்று, மகிழ்ச்சியுடன் வெளியேறியதாகவும், இந்த விழாவிற்காக ரூ.7,500 கோடி செலவிடப்பட்டு ரூ.3 லட்சம் கோடி வருவாய் ஈர்த்ததாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில சட்டசபையில் பெருமையுடன் கூறினார்.
இந்த நிலையில், கும்பமேளாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழக்கவில்லை, குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 50 மாவட்டங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சந்தித்து பிபிசி கள ஆய்வு நடத்தியுள்ளது. அதில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை ரூ.25 லட்சத்தை காசோலை மூலம் அதிகாரப்பூர்வமாக கொடுத்த உத்தரப் பிரதேச அரசு கொடுத்துள்ளது. மேலும், மறைமுகமாக 26 குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் ரொக்கமாக அதிகாரிகள் மூலம் கொடுத்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அந்த 26 பேரும், உயிரிழந்தவர்களின் பட்டியலில் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
ரொக்கமாக பணம் பெற்றவர்களில் பெரும்பாலானோர், பணம் வாங்கியதை தாங்களே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வைத்திருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மாநில காவல்துறையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கூட்ட நெரிசலில் இறந்த 19 பேரின் குடும்பங்களுக்கு, அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவந்தாலும், சாட்சிகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலம் உறுதியாக 82 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பிபிசி அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.