Skip to main content

"நீ அளந்து விடு, என்னிடம் ஆதாரம் இருக்கு!" - சீமான் குறித்து சீறிய வைகோ!   

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

நியூட்ரினோ திட்டத்தின் ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு திரட்டவும் ம.தி.மு.க தலைவர் வைகோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார் . சமீப காலமாக வைகோவிற்கும் சீமானுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு கூட்டத்தில் வைகோ பேசியபோது 'நாம் தமிழர்' கட்சியை சேர்ந்தவர்களுக்கும் மதிமுகவினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக வெள்ளிக்கிழமை நடை பயணத்தின்பொழுது பேசிய வைகோ  சீமானை நேரடியாக தாக்கிப்பேசினார். அவர் பேசியது :

 

vaiko nadaipayanam



"சமீபத்தில் ஜெனிவாவிற்கு நான் சென்று தனி ஈழம் அமைக்க வேண்டும் என்று ஐநாவில் பேசினேன். அப்பொழுது அவர்கள் சொன்னார்கள், ஆயுதப்போர்  முடிவுக்கு  வந்து விட்டது  என்று . அதற்கு  நான் சொன்னேன், "பொதுவாக்கெடுப்பு  நடத்தி  தனி ஈழம்  அமைக்கவேண்டும் என்று. நான் இரண்டு நாட்கள் இனப்படுகொலை பற்றி பேசினேன் இலங்கை அரசுதான் கொன்றது சர்வதேச விசாரணை வேண்டும்  என்று.  நான் பேசி முடித்துவிட்டு வெளியே வந்தபொழுது  இலங்கையை சேர்ந்த ஒரு எட்டு நபர்கள் என்னை இராணுவத்தில், கடற்படையில் என  அனைவரையும் கொன்று குவித்த கிருமிகளை அனுப்பியுள்ளது இலங்கை அரசு. அதிலிருந்து  ஒரு பெண்மணி வந்துகேட்டார், "எங்கள் நாட்டைப் பற்றி பேச நீ யார்?" என்று ஆங்கிலத்தில் கேட்டார். "நீ ஒரு கொலைகாரன், எல்.டி.டி" என்றார். நான் பயப்படவில்லை என் தாய், தந்தையின் இரத்தத்தில் வீரம் இருக்கிறது. அது எனக்கும் இருக்கிறது. நான் கூறினேன், "நீங்கள் இரத்தவெறி பிடித்த பிசாசுகள்" என்று. நான் பேசியதை மட்டும் அவர்களின் போனில் வீடியோ எடுத்துக் கொண்டனர். அதைக் காட்டினால், நான் பிரச்சனை செய்தேன் என்று ஐ.நா சபை என்னை வெளியே அனுப்பிவிடுவார்கள். ஆனால் இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கு வந்த ஐ.நா அதிகாரிகள், அவர்களிடமிருந்து போனை பிடுங்கி விட்டனர்.  வெளியே வந்து நான் பேட்டிகொடுத்தேன். என்  பக்கத்தில் இயக்குனர் கௌதமன் நின்றார். அடுத்த நாளிலிருந்து எனக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தது ஐ.நா. நான் அதை எதிர்பார்க்கவில்லை. எந்த இடத்திலும் தமிழனையும், தமிழ்நாட்டையும் விட்டுக்கொடுக்காதவன் நான்.

 

vaiko with seeman



ஆனால், இங்கு ஒருவர் என்னவென்றால் பெரியாரை திட்டுகிறார், 'பெரியார் தமிழன் இல்லை' என்று கூறினார். பெரியார் இல்லை என்றால் நாமெல்லாம் யாரு? நம் பிள்ளைகள் எல்லாம் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், நீதிபதி, அதிகாரிகள் என்று ஆவதற்கு பெரியார்தானே காரணம்? அவரைத் திட்டினாய், அடுத்து என்னை தமிழர் இல்லை என்றாய். விடுதலைப் புலிகளின் பெயரை  வைத்துக்கொண்டு எச்சை பிழைப்பு பிழைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் காசை வாங்கிக் கொண்டு என்னிடம் ஆயிரம் ஆதாரம் இருக்கு என்கிறாய் எடுத்து விடு. 'என் தம்பிகள் என்ன செய்வார்கள் என்று தெரியாது' என்று சீமான் நேற்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். உன் தம்பிகளை வெட்டச் சொல்லு, சுடச் சொல்லு. 

 

Vaiko in LTTE uniform



பாரிஸ் நகரில் விடுதலைப்புலிகள் தளபதி கர்னல் பரிதியை கொலை செய்த இரண்டு துரோகிகளை  உன்னுடன் வைத்துள்ளாய் என்பது எனக்குத் தெரியும். பாரிஸில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் சென்று பார்த்து வந்தேன். அதன் பிறகு இரண்டுமாதம் கழித்து அவர் மாடியிலிருந்து இறங்கி வரும்பொழுது இலங்கையை சேர்ந்த இருவர், கூலிப்படையை சேர்ந்தவர்கள் பரிதியைக் கொன்றார்கள். அவர்களின் புகைப்படம் உள்ளது என்னிடம். நான் இவ்வளவு நாளாக அதை பற்றிப் பேசவில்லை. சீமான் சொல்கிறார் "லட்சம்பேர் வைகோவிற்காக உயிரை கொடுப்பார்கள் என்று சொல்கிறாரே, அவர் நடைப்பயணத்தில் ஐம்பது நபர்கள்தான் செல்கிறார்கள்" என்று. என் கட்சிக்காரர்களும், மாவட்ட செயலாளர்களும் வசதியானவர்கள் அல்ல. நான் ஐயாயிரம் பேர் அழைத்துச் சென்றால் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதனால், நான்தான் முந்நூறு பேர்போதும் என்று கூறி வைத்துள்ளேன், நீ அதை கிண்டல் செய்கிறாய்.

 

vaiko with prabakaran



நான் உன்னைப் பற்றிய விஷயங்களை ஆதாரத்துடன் வைத்துள்ளேன். கனடாவில் ஒரு பெண் இருக்கு, அந்தக் கருமத்தையும் சொல்வேன். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை எட்டு நிமிடம்தான் நீ சென்று சந்தித்துள்ளாய். நேற்று கூட ராஜ்கிரண் பேட்டியில் கூறினார். 'திரையுலகத்தில் உள்ள அனைவரும் சென்றோம். அதை வைத்துக்கொண்டு இவன் உலக அரசியல் பேசிக்கொண்டிருக்கிறான்' என்றார். அந்த எட்டு நிமிட சந்திப்பில், நீ அவர்களின் சீருடையில் போட்டோ எடுக்க அனுமதி கேட்டுள்ளாய். அதற்கு இங்கு உள்ளவர்களைத் தவிர யாருக்கும் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார். நான் அங்கு சென்ற பொழுதே சீருடையில்தான் சென்றேன். என்னிடம் ஆதாரம் உள்ளது. பிரபாகரன் எனக்கு எழுதிய கடிதத்தில் 'ஆயிரம் முறை இறப்பேன் வைகோவின் தியாகத்திற்கு' என்று அவர் கைப்பட எழுதியிருக்கிறார். 

நான் பேசக்கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால், நீ பெரியாரை திட்டினாய், அண்ணாவை முட்டாள் என்றாய். இதுபோல் பேசி கலவரத்தை உண்டாக்கி வசூல் செய்துகொண்டிருக்கிறாய். உலகம் முழுவதும் விடுதலைப் புலிகளுக்கு என்னை பிரதிநிதியாக நியமித்துள்ளார் என்று கூறி கோடிக் கணக்கில் வசூல் செய்துள்ளாய், எனக்கு தெரியும். நான் பிரஸ்சல்ஸ் மாநாட்டிற்கு சென்றிருந்தேன். அந்த மாநாட்டை நடத்துபவரிடம் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று நீ கேட்டாய். அதற்கு அவர் கூறியுள்ளார், 'வைகோ அண்ணன் ஆங்கிலத்தில் பேசுவார் அவர் வந்தால் எங்களுக்கு பிரயோஜனம் என்பதற்காக  கூப்பிட்டோம்' என்று. அதே பையன் என்னுடன் பிரான்ஸ் மாநாட்டில் காரில் செல்லும் பொழுது கூறினார், சீமான் மாநாடு நடத்த வேண்டும் மூன்றுகோடி தாருங்கள் என்று கேட்டதாக. 'முந்நூறு டாலர் கூட எங்களிடம் இல்லை, நாங்கள் எப்படி மூன்று கோடி தர முடியும்?' என்றேன் என்று அவர் என்னிடம் கூறினார். 
 

seeman with prabakaran



நான் எத்தனையோ நாடுகளுக்கு சென்றுள்ளேன். விடுதலைப் புலிகளிடமோ, ஈழத்தமிழர்களிடமோ ஒரு பைசா கூட  வாங்கியதில்லை.  விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல்  கட்டணம் கூட நான் கட்டிவிட்டு வருவேன். நீ மூன்று கோடி கேட்டுள்ளாய். இது போல் நூறு ஆதாரம் என்னிடம் உள்ளது. உன் உணர்ச்சிமிக்க பேச்சில், 'இப்படி ஒரு வீரன் இருக்கிறானா?' என்று நினைத்துக் கொண்டு உன் பின்னால் வந்து இளம்பிள்ளைகள் நிற்கிறார்கள். அவர்கள் மீது தவறில்லை. அவர்கள் தமிழ் உணர்வுமிக்கவர்கள், ஈழவிடுதலை வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களை நான் திட்ட மாட்டேன். நீதான் இது போன்ற பித்தலாட்டங்களை செய்து கொண்டிருக்கிறாய். 

ஒரு முறை மலேசியாவில் ஈழ மாநாட்டிற்கு சென்றிருந்தேன். பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமி மேடையில் பேசுகையில் சொன்னார், 'தமிழகத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு போன் செய்து, இந்த மாநாட்டிற்கு வைகோவை அழைக்காதீர்கள், அவர் தமிழர் அல்ல என்று சொன்னார். நான் சொன்னேன் வைகோ தமிழர் இல்லையேல், இந்த உலகத்தில் எவரும் தமிழர் அல்ல என்று'. பேசிவிட்டு அவர் என்னிடம் வந்து சொன்னார், "வைகோ அண்ணா, அப்படி என்னிடம் கூறியவர் சீமான்" என்று. எம்.ஜி.ஆர் மலையாளி என்றீர்கள்  எம்.ஜி.ஆர் போல் விடுதலைப் புலிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக் கொடுத்தவர் எவரும் இல்லை, நானே அவ்வாறு செய்யமுடியுமா என்று தெரியவில்லை. மருத்துவமனை, ஆயுதப்படைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். இன்னும் நூறு விஷயங்கள் என்னுள் அடங்கியுள்ளது. தேவைப்பட்டால் ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.

 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது” - வைகோ

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
"BJP's election ,manifesto will not be taken in Tamil Nadu says Vaiko

ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் சென்று கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி இருவரும் ஆறுதல் கூறினர்.

பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் எனப் பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து, புதிதாக (டெஸ்ட்)சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது.

பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபாடாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்தபோது எட்டிக் கூட பார்க்காத பிரதமர்  எப்படியாவது பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் எனத் தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றிப் பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க மாநில தலைவர்  வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரச்சாரம் செய்து வருகிறார்‌. இதற்கு தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.