Skip to main content

கரோனா-வை கட்டுப்படுத்த கோலி, சச்சினிடம் ஆலோசனை கேட்பதா...? - பியுஸ் மனுஷ் அதிருப்தி!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

கரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு பெரும்பாலான வீடுகளில் விளக்கு ஏற்றப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேஸ்புக் நேரலையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், "ஒற்றுமைக்காக விளக்கேற்றுவதாக பலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் செயல்கள் முற்றிலும் வேறுபாடு நிறைந்ததாக இருக்கிறது. அவர்களின் சமூக வலைதள பக்கத்திற்கு சென்று பார்த்தால் குறிப்பிட்ட மதத்தினர் மீது சேற்றைவாரி இறைத்திருப்பார்கள். யுனிட்டி என்றால் என்ன, எனக்கு தெரிந்த வரைக்கும் ஒருவருக்கொருவர் ஒன்றுமையாகவும் உதவும் மனப்பான்மையோடும் இருப்பதுதான்.

  d



இதுதான் எனக்கு தெரிந்த ஒற்றுமை. ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது. ஆபத்தில் இருப்பவர்களை இப்படித்தான் நெருப்பில் தள்ளிவிடுவீர்களா? சில நாட்களுக்கு முன்பு இவர்களை கைதட்ட சொன்னபோதே தெரியவில்லையா? இவர்கள் என்ன செய்தார்கள் என்று. சிலர் கையை, காலை கொளுத்திக்கிட்டு வீட்டிலேயே கட்டுப்போட்டு இருக்கிறார்கள், மருத்துவமனைகளில் வேறு அட்மிஷன் இல்லை. 5 நாட்களுக்கு முன்னர் கைதட்ட சொன்ன போதே இவர்கள் லட்சணம் உங்களுக்கு தெரிந்திருக்குமே? அப்படி தெரிந்திருந்தும் அவர்களை விளக்கேற்ற சொன்னது எப்படி சரியாகும். விளக்கை வைத்து விபரீத செயல்களில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டனர்.
 

nakkheeran app



இவ்வளவு பொது அறிவு கூட மோடிஜி-க்கு இல்லை என்றால் எப்படி. இன்னும் கொஞ்ச நாட்கள் வேறு இருக்கின்றது. அதில் என்ன கூத்து நடக்க போகின்றதோ தெரியவில்லை. ஆனால் எல்லோரும் கையில் தட்டு வைத்துக்கொண்டும், விளக்கு வைத்து கொண்டு நிற்கிறார்கள். 52 மருத்துவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் என்று காட்டியுள்ளது.  மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகின்றது. மோதுமான அளவு மாஸ்க் இல்லை என்று கூறுகிறார்கள். இவர்களின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லை. பணத்தின் மதிப்பை அதிகரிக்க போகிறோம் என்றார்கள், அது எங்கேயோ போயிடுச்சி.

பொருளாதாரத்தை சரி செய்யபோகிறோம் என்றார்கள். அதுவும் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. வேலை வாய்ப்பை கொடுக்க போகிறோம் என்றார்கள், அன்றைக்கே நமக்கு புரிந்திருக்க வேண்டும் வேலை வாய்ப்பே இல்லை என்று. அவர்கள் சொல்வதற்கும், செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கரோனாவை கட்டுப்படுத்த சச்சின் டெண்டுல்கரிடம், கோலியிடமும் ஆலோசனை கேட்கிறார்கள். அந்த நிலைமையில்தான் நாடு உள்ளது" என்றார்.