Skip to main content

விநாயகர் கோயிலில் அசாது நவாப்பு சாய்பு பெயரில் அரிய தமிழ்ச் செப்பேடுகள்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Rare Tamil Seppedu in the name of Asad Nawab Saipau in Vinayagar Temple

இந்துசமய அறநிலையத்துறையின் சுவடித் திட்டப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திட்டப்பணியில் இதுவரை 676 திருக்கோயில்களில் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் இருப்பது குறித்து கள ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இக்கள ஆய்வின் மூலம் செப்பேடுகள் 9, செப்புப் பட்டயங்கள் 34, வெள்ளி ஏடுகள் 2, தங்க ஏடு 1ம் இருந்தமை கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் கண்டறியப்பட்ட செப்பேடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

இக்கோயிலில் 2 செப்பேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறு கண்டறியப்பட்ட செப்பேடுகளில் உள்ள செய்திகள் குறித்து  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் ஆய்வு செய்துள்ளார்.  அதிலுள்ள செய்திகள் குறித்து அவர் கூறியதாவது: ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில் செப்பேடுகள் வரலாற்றுச் சிறப்புடையவை ஆகும். செப்பேடுகள் 'அசாது நவாப்பு சாய்பு' என்ற இசுலாமியருக்குப் புண்ணியம் கிடைத்திடச் செய்யப்பட்ட தானம் பற்றிப் பேசுகின்றன. 

நவாப்புகள் பெயர்களில் இந்துக்கோயில்களில் தர்மதானக் கட்டளைகள்:

ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கர்நாடகப் பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் இவர்கள் கர்நாடக நவாப்புகள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் முகலாய மன்னர்கள் உதவியுடன் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்தனர். நவாப்புகள் ஆட்சி பற்றி கான்சாகிபு சண்டை, பூலித்தேவன் கும்மி, தேசிங்குராஜன் கதை முதலிய ஓலைச் சுவடிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆற்காடு நவாப்புகளின் வரலாற்றில், சதக்கத்துல்லாகான், சந்தா சாகிப் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

நவாப்புகள் ஆட்சிக் காலத்தில் நவாப்புகள் பெயரில் இந்துக் கோயில்களில் பல புண்ணிய தர்மக்கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி குறவர் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு நித்திய அபிசேகம், நெய்வேத்தியம் நடப்பதற்கு லாலு கான் சாய்பு அவர்கள் பெயரில் கி.பி.1759 ஆம் ஆண்டு தானக் கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளமையினை நெல்லையப்பர் கோயிலில் உள்ள செப்புப் பட்டயம் ஒன்று தெரிவிக்கிறது. அதுபோல குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கி.பி.1848ஆம் ஆண்டு நித்திய விழா பூசை மற்றும் நெல்லை காந்தியம்மன் சிறு காலப் பூசைக்கு அசாது வால சாயுபு, இசுமாலி ராவுத்தர் முதலியோர் சேர்ந்து தானப் பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

Rare Tamil Seppedu in the name of Asad Nawab Saipau in Vinayagar Temple

ராச மானியார் அசாது நவாப்பு சாய்பு பெயரில்  கோயில் தர்மதானக்கட்டளை:

ஆறுமுகமங்கலம் அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் உள்ள 2 செப்பேடுகளும் கி.பி.1774 ஆம் ஆண்டில் எழுதப்பட்டவை ஆகும். இந்த இரண்டு செப்பேடுகளும் அக்காலத்தில் வாழ்ந்த ‘ராச மானியார் அசாது நாவாப்பு சாய்பு’ என்பவருக்குப் புண்ணியம் கிடைக்க ஆயிரத்தெண் விநாயகர் கோயிலுக்கும் மாறமங்கலம் சந்திரசேகர சுவாமி திருக்கோயில் திருப்பணிக்கும் திருப்பணித் தர்மக் கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தர்மக்கட்டளையை ஆறுமுகமங்கலம் மகாசனங்களும், மாறமங்கலம் மகாசனங்களும், புதுக்கிராம மகாசனங்களும், பிள்ளைமார் குடியான பேர்களும், இருவப்பபுரம் வெள்ளோடை நஞ்சை பயிரிடுகிற குடியான பேரும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளனர். மேற்படியார் கிராம நஞ்சை  பயிரேறின நிலத்துக்கு அறுப்படிப்புக்கும், அரண்மனைக்கும், குடிகளுக்கும் பொதுவாகப் போர் 1க்கு நெல் 1/ 20 ( ஒருமா ) வழங்க  வேண்டும். மேலும், கோயில் கட்டளைப்படியாகப் போர் 1க்கு 1/20 ( ஒருமா) படி நெல் வீதம் வழங்கி திருப்பணி தர்மம் தொடர்ந்து நடத்தி வர வேண்டும் என்றும் முதல் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. முதல் செப்புப் பட்டயத்தின் இறுதியில் 30 நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது செப்புப் பட்டயத்தின் முன்பகுதியிலும் இச்செய்தி அப்படியே கூறப்பட்டுள்ளது.  மேலும் கூடுதலாக ஆயிரத்தெண் விநாயகர் கோயிலுக்கு கிரைய சாசனம் அடிப்படையில் வாங்கி வாகன கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு விவரம் 1/2 1/8 (அரைஅரைக்கால்) ம் அரண்மனையில் இரு ரெட்டிப்பாட்டம் விவரம் 1/2 1/8 (அரை அரைக்கால்) க்கும் ஒண்ணேகால் கோட்டை நெல் வாங்கிக்கொண்டு திருப்பணி நடத்தி வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சாம்பிராணிக் கட்டளைக்கு சுத்த மானியம் அரையும் விட்டு வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வாகன கட்டளைக்கு ஒழுகுபனையைக் கிரைய சாசனத்துக்கு வாங்கிக் கொண்டும் அரண்மனைப் பொறுப்பாக அஞ்சு பணம் வாங்கிக் கொண்டும் திருப்பணி தர்மத்தை நடத்தி வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் மாறமங்கலம் களத்தில் வருகிற போருக்குள்ள நெல்லும் அந்தக் கிராமத்திலுள்ள பொறுப்பு விவரம் 3/4 (முக்கால்) ம் சந்திரசேகரர் கோயில் திருப்பணி தர்மத்துக்கு வழங்கிட திருப்பணிக்கட்டளை ஒன்றை ஆனந்தராயர் அவர்களின் காரியகர்த்தாவான இராமச்சந்திரய்யனும், சம்பிரிதி மாலைப்பிள்ளை, நாட்டுக் கணக்கு தெய்வநாயகம் பிள்ளை ஆகியோர் ஏற்படுத்தியுள்ளனர். அதுபோல சபாபதி ஏழாந் திருவிழா மண்டகப்படிக் கட்டளைக்கும், திருவாதிரை கட்டளைகளுக்கும் நாட்டுக்கணக்கு தெய்வநாயகம் பிள்ளை கல்மடை பாய்ச்சலில் கனியா முடங்கன் கலி 1ம் நெல் 1/2 1/6 (அரை மாகாணி)ம் நாலாம் புளிப்பனை விளையும் கட்டளைக்கு விட்டுக் கொடுத்துள்ளார். 

சுவாமி ஆயிரத்தெண் விநாயகருக்குத் தாண்டவராய முதலியார் நெய்விளக்கு கட்டளைக்கு விட்டுக்கொடுத்தது புதுக் கிராமம் மகாசனங்கள்கிட்ட ஒத்துக்கொண்ட சிறு கால சந்திக்கு மூலைவயல் நெல் 1/4 (கால்) படியும் அதிலுள்ள நிலமும் அரண்மனைப் பொறுப்பு நெல் 1க்கு விவரம் 2 வீதம் அஞ்சு பணம் பொறுப்பாய் வாங்கி வழங்கி நெய்விளக்கு கட்டளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போன்ற செய்திகள் செப்பேடுகளில் இடம்பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.