Skip to main content

பாஜக முடிவுக்கு ரஜினி சொன்ன நோ... தப்பித்த எடப்பாடி அரசு... தமிழ்நாட்டில் ஜெ.க்கு பிறகு நயன்தாரா தான்!

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

"சினிமா பிரபலங்களை பா.ஜ.க.வில் இணைக்கும் அசைன்மெண்ட் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படுவதன் முதல் வெளிப்பாடுதான், நமீதா இணைப்பு. இது போதாது என அடுத்த அசைன்மெண்ட் வேகமெடுத்துள்ளது. தமிழகத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் விசிட் அடித்தார் பிரபல நடிகை நயன்தாரா. அதே முருகன் கோவிலுக்கு சென்றிருந்த பா.ஜ.க. பிரமுகரும் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன், நயன்தாராவிடம் 15 நிமிடம் பேசியிருக்கிறார்.

 

actress



நயன்தாராவிடம் பேசியது குறித்து நரசிம்மனிடம் நாம் கேட்டபோது... "சினிமா பிரபலங்கள் பலருக்கும் அரசியல் ஆர்வம் இருக்கிறது. அவர்களை பா.ஜ.க.வில் சேர்க்கும் முயற்சியிலும் நான் இருக்கிறேன். சினிமாவில் புகழ் கிடைக்க வைத்த மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வரவேண்டும் என நயன்தாராவிடம் சொன்னேன்.


"தேசிய அளவில் மக்களின் ஏகோபித்த ஆதரவு பா.ஜ.க.வுக்கும் பிரதமர் மோடிக்கும்தான் இருக்கிறது. அதனால் பா.ஜ.க.வில் இணைந்து நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்' என அவரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. நான் கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிக்கொண்டதுடன், "அவசியம் உங்களிடம் பேசுகிறேன்' எனவும் தெரிவித்தார் நயன்தாரா. அரசியலுக்கு அவர் வருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என விவரித்தார் நம்மிடம்.

நடிகை நயனை சந்தித்துப் பேசியதை பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு பாஸ் செய்திருக்கிறார் நரசிம்மன். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று திரும்பிய இரண்டாவது நாளில், பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமான இளம் நிர்வாகி ஒருவர், நயன்தாராவை தொடர்பு கொண்டு டெல்லிக்கு வருமாறு அழைக்க, "பிரதமர் மோடியை சந்திப்பதாக இருந்தால் வருகிறேன்' என சொல்லியிருக்கிறார் நயன்தாரா.

 

 

bjp



தேசிய தலைவர்களுக்கு நெருக்கமான தமிழக பா.ஜ.க.வினரிடம் நாம் பேசியபோது... "தமிழக அரசின் ஆயுள்காலம் 2021 மே மாதம்வரை இருந்தாலும், டெல்லி போட்டுள்ள சில ப்ளான்கள் வொர்க்அவுட் ஆகும் சூழல் வந்தால் தமிழகத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடக்கும். நடிகர் ரஜினியை மிகவும் நம்பியிருந்தது எங்கள் தலைமை. பா.ஜ.க.வில் இணையுமாறு பல சந்தர்ப்பங்களில் மோடி, அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் ரஜினியை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ரஜினி இதனை துவக்கத்திலிருந்தே ஏற்கவில்லை.

"அரசியலுக்கு வருவதாக இருந்தால் தனியாகத்தான் வருவேன். தேர்தலை சந்திப்பேன். தேர்தல் முடிவுகள் எனக்கு சாதகமாக இருந்தால், அப்போதைய சூழலில் விவாதிக்கலாம். பா.ஜ.க.வில் இணைவதோ, கூட்டணியோ எதுவும் இல்லை' என தெளிவாகவே கூறிவிட்டார் ரஜினி. பா.ஜ.க.வின் விருப்பத்தை ரஜினி ஏற்காததால்தான் எடப்பாடி அரசு தப்பித்து வருகிறது. பா.ஜ.க.வின் விருப்பத்தை ஏற்று குறைந்தபட்சம் கூட்டணிக்கு ரஜினி சம்மதம் தெரிவித்திருந்தால் கூட, தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வந்திருக்கும். இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து தமிழிசை விடுவிக்கப்பட்டதையடுத்து, வெற்றிடமாக இருக்கும் அந்த பதவியை மையப்படுத்தி மீண்டும் ஒருமுறை ரஜினியிடம் பேசிப் பார்த்தனர். தனது நிலையில் ரஜினி உறுதியாக இருந்ததால், "இனி அவரை பா.ஜ.க.வுக்கு அழைக்க வேண்டாம்' என மோடியும் அமித்ஷாவும் முடிவு செய்தனர். பா.ஜ.க.வின் அழைப்பு பட்டியலில் இருந்து ரஜினி பெயரும் நீக்கப்பட்டது. அதேசமயம், மக்களிடம் பிரபலமடைந்த சினிமா வி.ஐ.பி.க்களை கட்சிக்குள் கொண்டு வரும் அசைன்மெண்ட்டும் கொடுக்கப்பட்ட நிலையில்தான்... தற்போது நயன்தாராவை பா.ஜ.க.விற்கு கொண்டுவரும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது'' என சுட்டிக் காட்டுகிறார்கள்.

 

rajini



பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் விசாரித்தபோது, "குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரானவற்றை எதிர்கொள்வது குறித்து ஜே.பி.நட்டா தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பெங்களூருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு சில வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த க்ளாஸ் முடிந்ததும் தென்னிந்திய அரசியல் குறித்து முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் விவாதித்தார் நட்டா. அதில் தமிழக பா.ஜ.க. குறித்தும் விவா திக்கப்பட்டபோது, "தமி ழக அரசியலுக்கும் சினிமா கிளாமருக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. புகழின் உச்சியில் இருக்கும் சினிமா பிரபலங்களை பா.ஜ.க.வில் சேர்ப்பது கட்சிக்கு வலிமை சேர்க்கும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தை ஈர்க்கும் பெண் பிரபலங்கள் யாரும் தற்போதைய அரசியலில் இல்லை' என சொல்லி, நயன்தாரா பற்றி விவாதித்தனர். இது குறித்து அமித்ஷாவிடம் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார் நட்டா'' என்கிறார்கள்.


இந்த நிலையில், ஷூட்டிங்கிற்காக கன்னியாகுமரிக்கு கடந்த 17-ந் தேதி வந்த நயன்தாரா, சாமி தோப்பிலுள்ள அய்யா வைகுண்டர் ஆலயத்துக்குச் சென்று வணங்கியிருக்கிறார். இந்த ஆலயத்துக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், தேவகௌடா போன்ற அரசியல் தலைவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்துசென்ற பிறகே பிரதமரானார்கள். ஊழல்களால் ஆட்சியை இழந்த ஜெயலலிதா, வைகுண்டர் ஆலயத்துக்கு வந்து சென்ற பிறகே 2001-ல் மீண்டும் ஆட்சியை பிடித்தார் என சென்ட்டிமெண்டாகவும் பேசப்படுகிறது ஆன்மிக நம்பிக்கை நிறைந்த பா.ஜ.க. தரப்பில்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.