Skip to main content

என்ன செய்யலாம் இவர்களை? - உலகமெங்கும் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள்

Published on 12/03/2019 | Edited on 12/03/2019

  

pollachi


பாலியல் வன்புணர்வு... பொருளாதாரத்தில், கல்வியில் எவ்வளவு முன்னேறினாலும், மாற்றங்கள் வந்தாலும் மாறாமல் தொடர்ந்து நிகழ்கிறது. இது உலகம் முழுவதும் நடக்கிறது. ஆனால், நாட்டுக்கு நாடு எண்ணிக்கையால் வேறுபடுகிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து நிகழ்கிறது. பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி, நண்பன் என்ற நம்பிக்கையில் வந்த பெண்களிடம் நான்கு காட்டுமிராண்டிகள் தவறாக நடந்துகொள்ளும் வீடியோ வெளியாகி தமிழகம் கொந்தளிப்பில் இருக்கிறது. நான்கு பேர் மட்டுமல்ல, மேலும் பலர் தொடர்பிருப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது இந்த வழக்கில் முக்கியமாக சம்மந்தப்பட்டுள்ள திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் போட்டிருக்கின்றனர். மக்கள், தங்களின் கோபத்தை, ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். 
 

இப்படியெல்லாம் இனி நடக்க கூடாது என்று, நிர்பயா சம்பவத்திலிருந்து... ஏன் அதற்கு முன்னிருந்தும் கூட நாம் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மேலும், மேலும் இது அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்ட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இந்தியாவில் இந்திய தண்டனை சட்டம் (IPC) 375ன்படி அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கு மேலும் தண்டனை வேண்டும் என்று நினைப்பவர்கள், வாருங்கள் ஒவ்வொரு நாட்டிலும் என்ன தண்டனை கொடுக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, பின் நீங்களே முடிவு செய்யுங்கள்.


சீனா

இந்த நாட்டில் ஒருவர் வன்புணர்வு செய்தால் அவருக்கு உடனடியாக மரண தண்டனை அறிவித்து, பின்னர் அவரது ஆணுறுப்பை தனியே எடுத்துவிடுகின்றனர்.


இரான்

பொது மக்கள் முன்பு சுட்டு தள்ளுகின்றனர் அல்லது தூக்கில் இடுகின்றனர். சிலருக்கு தண்டனை குறைக்கும்படியாக இருந்தால் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.


நெதர்லாந்து

எந்த மாதிரியான பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அது பாலியல் வன்புணர்வாகவே வழக்கில் ஏற்றுகொள்ளப்படுகிறது. அது முத்தமாக இருந்தாலும் சரி அந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் கொடுத்தால் வழக்கு பதியப்படும். தப்பு செய்தவரின் வயதை பொறுத்து நான்கு முதல் பதினைந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.


வடகொரியா

பெண்களை பாலியல் வன்புணர்வு செய்பவர்களுக்கு இங்கு துளிகூட கருணை கிடையாதாம். பாதிக்கப்பட்டவரை வைத்தே சுட்டு தள்ளிவிடுகிறதாம் அரசு.
 

ஆப்கானிஸ்தான்

இங்கு நீதி என்பது பாதிக்கப்பட்டவரின் கையிலேயே கொடுக்கப்படுகிறது. நான்கு நாட்களுக்குள் பாலியல் வன்புணர்வு செய்தவரின் தலையில், பாதிக்கப்பட்டவர் சுட்டுத்தள்ள வேண்டுமாம்.
 

punishment


அமெரிக்கா

இங்கு இரண்டு விதமான சட்டங்கள் இருக்கிறது. அதில் பெடரல் சட்டம் பாலியல் வன்புணர்வு செய்தவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கிறது. மாநில சட்டங்கள் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றாற்போல் மாறுபடுகிறதாம்.


சவூதி அரேபியா

இந்த நாட்டில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தீர்ப்பு வந்துவிட்டால், உடனடியாக மக்கள் முன்பு அவரைக் கொன்றுவிட வேண்டுமாம்.


எகிப்து

இந்த நாட்டில் மக்கள் முன் பாலியல் வன்புணர்வு செய்தவரை தூக்கில் இடுகின்றனர். அப்போதுதான் மக்கள் அதை பார்த்து அச்சப்பட்டு திருந்துவார்களாம்.


ஐக்கிய அரபு நாடு

இங்கு தீர்ப்பு வந்த ஏழே நாட்களுக்குள், தவறு செய்த அந்த நபரை தூக்கில் ஏற்றி கொன்றிருக்க வேண்டும்.


கிரீஸ்

இந்த நாட்டில் வன்புணர்வு செய்தவரை சிறையில் அடைப்பார்களாம்.


இது போன்று ஒவ்வொரு நாட்டிலும் கொடுமையான, கடுமையான தண்டனைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தவறுகள் செய்பவன் எந்த நாட்டில் இருந்தாலும் தவறு செய்வான். இப்படி அவன் தவறான காரியங்களில் ஈடுபடும்போது அது அவனின் தாய், தந்தையினரின் வளர்ப்பை கேள்வி குறியாக்கும். மேலும், அவன் மனிதனா அல்ல மிருகமா என்ற கேள்வியையும் கொண்டு வருகிறது. எந்தத் தவறு செய்தாலும் வெளியே வந்துவிடலாம் என்கிற தைரியத்தை அளிக்கும் அரசுகளும், அதிகாரிகளும், காவலர்களும் இருக்கும் வரையில் எவரும் மாறப்போவதில்லை....