Skip to main content

கோயம்பேடு மார்க்கெட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும்! -சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

koyambedu market


கரோனா தொற்று அதி வேகமாகப் பரவியதற்குக் கோயம்பேடு மொத்த வியாபார சந்தையும் ஒரு முக்கியக் காரணம் என்பதால், காய்கறிகள் சந்தையைத் திருமழிசைக்கும், பூ மற்றும் பழம் மார்க்கெட்டை மாதவரத்துக்கும் என இரண்டு பகுதிகளில் தற்காலிகமாக மாற்ற முடிவு செய்திருக்கிறது எடப்பாடி அரசு. 
   

இதற்காக நடந்து வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் திருமழிசைக்கு இன்று விசிட் அடிக்கின்றனர். இந்த நிலையில், ’’கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக மூன்றாகப் பிரிக்க வேண்டும்‘’ என்கிற கோரிக்கை சில்லரை வியாபாரிகளிடமும் சமூக ஆர்வலர்களிடமும் எதிரொலிக்கின்றன. இது குறித்து, முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பவும் தயாராகி வருகின்றனர். 
                             

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கண்ணன், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் வந்து போகிறார்கள். மொத்த வியாபாரிகளின் கூடாரமான கோயம்பேடு சந்தை, சில சங்கங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட 12 நபர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
 

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் அதனைத் தடுப்பதற்காக கோயம்பேடு சந்தையை மாற்றியமைக்க மொத்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, கோயம்பேடு சந்தையை 3 இடங்களில் பிரித்து வைக்கலாம்; அதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள் எனச் சொன்னது. ஆனால், மொத்த வியாபாரிகள் ஒத்துழைக்க மறுத்தனர்.  
                            

அதே சமயம், தொற்று வேகமாகப் பரவி வந்ததால், அதனைத் தடுக்கும் பொருட்டு சென்னையில் 4 நாள் முழு ஊரடங்கை அரசு திடீரென அறிவித்தது. ஆனால், கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், சமூக விலகலை உடைத்தது. இதனால், சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு கரோனா பரவியதற்கு மிக முக்கியக் காரணியாக மாறியது கோயம்பேடு சந்தை. 
                            

இதற்கிடையே, காய்கறிகள் மீது செயற்கையான டிமாண்டை உருவாக்கினார்கள். அதாவது, ஏப்ரல் 26 முதல் 29 வரை சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என 24-ஆம் தேதி அறிவித்தது அரசு. கோயம்பேடு மார்க்கெட்டை தூக்கப் போகிறார்கள் என உணர்ந்து அதிர்ப்தியடைந்த மொத்த வியாபாரிகள், காய்கறிகளுக்கும் மளிகைப் பொருட்களுக்கும் செயற்கையான டிமாண்டை அதிகரிப்பதற்காக, 24-ஆம் தேதி விற்கப்பட்ட காய்கறிகளின் விலையைப் பல மடங்குக்கு உயர்த்தி விட்டனர். 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, 25-ஆம் தேதி 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் இப்படித்தான் உயர்ந்தது. இதனால் மக்கள் சொல்ல முடியாதத் துயரத்துக்கு ஆளானார்கள். 
                            

மக்களோடு தினமும் பயணிக்கும் சில்லரை வியாபாரிகள் கூட இந்தத் திடீர் விலை உயர்வில் மிகவும் நொந்து போனார்கள். இதனால் மொத்த வியாபாரிகள் மீது சில்லரை வியாபாரிகள் அதிருப்தியடைந்தனர். ஆனால், அவர்களை எதிர்க்கவும் முடியாமல், மக்களின் கோபத்தைச் சமாளிக்கவும் முடியாமல் திணறினார்கள்.  
 

இந்த நிலையில்தான், கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றுவது என்கிற திடமான முடிவை மொத்த வியாபாரிகளிடம் அரசு அதிகாரிகள் மீண்டும் விவரித்தனர். அதற்கு முழு மனதுடன் ஒத்துழைக்காமல் அரைகுறை மனதுடனே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் மொத்த வியாபாரிகள். நாளை முதல் திருமழிசையில் காய்கறிகள் மார்க்கெட் இயங்கும் எனத் தெரிவிகிறது. 
                          

சென்னை மற்றும் புறநகரில் உள்ள 2 கோடி மக்களுக்குக் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான, குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை. இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் மொத்த வியாபாரிகள் மீது அத்யாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிராக 'எஸ்மா, டெஸ்மா' சட்டத்தை எப்படிப் பிரயோகிக்கப்படுகிறதோ அப்படி மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க மொத்த வியாபாரிகள் தடையாக இருந்தால் அவர்கள் மீது அத்யாவசியச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். 2 கோடி மக்களின் நலன்களுக்காக மொத்த வியாபார சந்தையை ஆட்டிப்படைக்கும் 12 நபர்கள் மீது நடவடிக்கைப் பாய்வது தவறே கிடையாது. 
 

http://onelink.to/nknapp

 

murugan

                                                                  சமூக ஆர்வலர் கண்ணன்
                              

அதே போல, மொத்த வியாபார சந்தையை ஒரே இடத்தில் இருப்பதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. அதனால், கோயம்பேடு மொத்த வியாபார சந்தையை மூன்றாகப் பிரிக்க வேண்டும். கோயம்பேடு தவிர, வடசென்னை பகுதியில் ஒன்றும், வண்டலூர் பகுதியில் ஒன்றும் என மூன்றாகப் பிரிக்கும் போது நிறைய நன்மைகள் உண்டு. மிக முக்கியமாக, கோயம்பேடை மையப்படுத்தி நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகளவில் குறையும். இதுகுறித்து, அரசுக்கு கோரிக்கை அனுப்பவிருக்கிறோம்‘’ என்கிறார் மிக உறுதியாக! 


 

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.