Skip to main content

370-வது சட்டப்பிரிவு நீக்கம்! இனி என்னவாகும் காஷ்மீர்?

Published on 05/08/2019 | Edited on 05/08/2019


                       
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை நீக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு. இதற்கான அறிவிப்பை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (5.8.2019) அறிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவரும் வழங்கியிருக்கிறார். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்கிற அந்தஸ்து பறிபோயிருக்கிறது. 
 

மேலும், இந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக உடைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு.  மத்திய அரசின் இத்தகைய முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கொந்தளித்துள்ளன. பாஜகவின் இந்த முடிவுகளை அதிமுக எம்.பி.க்கள் வரவேற்று ஆதரித்திருக்கிறார்கள். 

 

kashmir


 

மத்திய அரசின் இந்த முடிவுகள் தேசம் முழுவதும் சர்ச்சைகளையும் அதிர்வுகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் நாம் பேசிய போது, ‘’ மத்திய பாஜக அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இனி  சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு - காஷ்மீர் இருக்கும்.  அதேபோல சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும்.
 

இதனை வைத்து ஆய்வு செய்கிறபோது, இனி ஜம்மு - காஷ்மீருக்கு தனிக் கொடி, தனி அரசியல் சாசனம் என்று எந்த விதமான அதிகாரங்களும் இருக்காது. இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கும் பொருந்தும்.  மாநிலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியல் சாசனத்தின் 370-வது விதி. இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம்.  


 

 

இந்திய அரசியல் சாசனத்தின்  238 வது பிரிவு இம்மாநிலத்திற்குப் பொருந்தாது என்ற நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இனி அனைத்துத் துறை சார்ந்து  மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்குக் கொண்டு வர முடியும். மேலும், வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணம் முடித்தால், அந்த ஆண்களால் காஷ்மீரில்  சொத்துகளை வாங்க முடியும். முன்பு  இந்த அதிகாரம் கிடையாது. 
 

இனிமேல் இந்தப் பிரச்சனை எப்படி அணுகப்படும் என்பதும் கேள்விக்குறியானது. காஷ்மீர் பிரச்சினை இன்றல்ல. ; நேற்றல்ல. பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பே சிறு சிறு கலகங்களாகத் தொடங்கின. ஆங்கிலேயர்கள் சாமர்த்தியமாக இதில் காய்களை நகர்த்தி தங்களுடைய இருப்பையும், ஆதாயத்தையும் பெருக்கிக் கொண்டனர்.  பஞ்சாப்பை பிடித்து ஆப்கானை ஆக்கிரமித்ததைப் போல, காஷ்மீர் பிரச்சினையிலும் சிக்கல் உருவானது.  ஆங்கிலேயர்களுக்குப் பல வகைகளிலும் துணையாக நின்ற ரன்பீர்சிங்கை, காஷ்மீர் அரசராக அங்கீகரித்தனர். அவருடைய வாரிசான ஹரிசிங்தான், அதாவது மத்திய அமைச்சர் கரண் சிங்கின் தந்தையார் காலத்தில்தான் பல நிகழ்வுகள் நடந்தேறின. 
 

இப்படியான சிறுசிறு பிரச்சினைகள் இருந்த சூழலில், நாடு 1947-இல் விடுதலை பெற்றது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவின்போது காஷ்மீர் சிக்கல் பெரிதாக எரிய ஆரம்பித்தது.  பல மன்னராட்சி சமஸ்தானங்கள், குறிப்பாக, இன்றைக்கு பாகிஸ்தானில் உள்ள ஐதராபாத், ஜோத்பூர், ஜூனாகத் மற்றும் பஞ்சாப் பகுதியில் உள்ள சமஸ்தானங்கள் பாகிஸ்தானோடு இணைய வேண்டுமென்று ஜின்னா போன்றவர்கள் விரும்பியதாகக் கூறப்படுவதுண்டு.


 

 

இதில் ஒரு சில பகுதிகள், அதிக இஸ்லாமியர்கள் மக்கள் தொகை கொண்ட சமஸ்தானங்கள் ஆகும்.  குறிப்பாக ஜம்மு-காஷ்மீரை தன்னோடு இணைத்துக் கொள்ள வேண்டுமென்று பாகிஸ்தான் மும்முரம் காட்டியது.  ஆனால், ஜூனாகத் சமஸ்தானத்தில் பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைய வேண்டுமென்ற விருப்பத்தின்படி இந்தியாவோடு இருந்துவிட்டது.  இந்த நிலையில் ஜின்னாவும், லியாகத் அலிகானும் பாகிஸ்தானோடு சேர்ந்தால்தான் இஸ்லாமியருக்கு நல்லது என்று பிரச்சாரம் மட்டுமல்லாமல், வேறு சில நடவடிக்கைகளிலும் இறங்கினர். அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரின் மீது படையெடுத்தது.
 

கரண்சிங்கின் தந்தையார் மன்னர் ஹரிசிங், இந்தச் சூழலில் இந்தியாவின் உதவியை நாடினார்.  ஷேக் அப்துல்லாவும் இஸ்லாமியரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தன்னுடைய காய்களை போராட்டக் களத்தில் நகர்த்தினார். ஹரிசிங் கையறு நிலையில் இருந்தார். பாகிஸ்தான் இராணுவமும் நெருங்கிவிட்டது. ஹரிசிங்கிடம் நேருவும், படேலும், "நீங்கள் உதவ வேண்டும். இந்திய இராணுவத்தை அனுப்புங்கள் என்று அழைத்தால் அனுப்புவோம். அதுமட்டுமல்லாமல், இந்தியாவோடுதான் இணைவோம் என சொல்லுங்கள்" என்று நிபந்தனையும் போட்டனர்.

 

K S Radhakrishnan


 

 "உங்களையும், உங்கள் சமஸ்தானத்தையும் இந்தியா பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தையும் தருகிறோம்" என்று பிரதமர் நேருவும், உள்துறை அமைச்சர் படேலும் அப்போது  கூறினர்.  கூறியவாறே ஹரிசிங்கையும், அவர் சமஸ்தானத்தையும் இந்திய அரசு காப்பாற்றியது. அவரும் உறுதியளித்தவாறு 1947, அக்டோபர் 26ஆம் தேதி முறைப்படி இந்தியாவோடு இணைந்தார். 
 

அந்த வகையில் இன்றைக்கு நீக்கப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் 370, 35A  ஆகியன, காஷ்மீரின் தனித்தன்மையைப் பாதுகாக்க இந்திய அரசு ஒத்துக்கொண்டது.  இதற்கான ஒப்பந்தங்களில் ஹரிசிங்கும், இந்திய அரசும் முறைப்படி கையொப்பமிட்டனர்.  இந்தப் பிரிவுகளை பின்னாள்களில் ரத்து செய்யச் சொல்லி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்ததெல்லாம் உண்டு.   இந்த நிலையில் பாகிஸ்தான், தன் எல்லைப் பக்கத்தில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, "ஆசாத் காஷ்மீர் " என்று தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது.  நேருவின் ஆட்சிக் காலத்தில் 1964-ஆம் ஆண்டில் சீனாவுடன் போர் ஏற்பட்ட காலத்தில் காஷ்மீரின் வடகிழக்குப் பகுதியில் சீனாவும் நுழைந்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இதை பாகிஸ்தானும் அன்று ஆதரித்தது. 

 

amit shah


 

இந்த நிலையில் பண்டித நேரு, காஷ்மீர் சிக்கலை ஐ.நா. மத்தியஸ்தத்திற்கு விட்டுவிட்டார். அன்றைய உள்துறை அமைச்சர் படேலும் நேருவின் இந்த முடிவுக்கு மாறுபட்டார்.  ஐ.நாவுக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றதில் இருந்து, கிணற்றில் போட்ட கல்லாக ஒரு தீர்வு எட்டப்படாமல் சீனாவும், பாகிஸ்தானும் தங்களது விருப்பத்திற்கேற்றவாறு சிக்கல்களை உருவாக்கிக் கொண்டே வந்தன. இடைப்பட்ட காலத்தில் பொதுவாக்கெடுப்பு என்கிற விவாதம் வந்தபோது, " ஆசாத் காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறினால்தான் சாத்தியம் " என்று ஐ.நா.வில் தெரிவித்தது இந்தியா. 
 

             காஷ்மீர் அழகான, அமைதியான பூமி. இன்றைக்கு கலவர பூமியாக மாறியதற்கு உலகப் புவியரசியலும் ஒரு காரணம்.  காஷ்மீர் பிரச்சினையின் விளைவாக 1980-களில் பஞ்சாபிலும் சிக்கல்கள் கடுமையாக இருந்தன.  காஷ்மீர் மக்கள் பலர் இந்தியாவுடன் இருக்கத் தான் பெரும்பாலும் விரும்புகின்றனர். யாசிம் மாலிக் போன்ற சிலர் , வேறு திசையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர் என்றும் காஷ்மீரில் இருப்பவர்களே சொல்கின்றனர். காஷ்மீர் பிரச்சினையில் ஒவ்வொருவரும் தவறான அணுகுமுறையில் நடத்திச் சென்றுவிட்டனர் என்பதே யதார்த்தம்.  காஷ்மீர் விவகாரத்தில் கண்டிப்பும் வேண்டும் ;  அனுசரணையும் வேண்டும். அதுவே தீர்வுக்கு வழி.  காஷ்மீர் மீண்டும்  அழகிய, அமைதியான பூமியாகத் திரும்பட்டும் ‘’ என்கிறார் மிக அழுத்தமாக !  
 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.