Skip to main content

எங்கே... எவ்வளவு? -எடப்பாடியின் ஃபாரின் கணக்கு!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

அன்னிய மூலதனத்தை இந்தியா வுக்கு கொண்டு வந்ததில் ஏற்பட்ட புகார்கள் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ப.சி.யை கைது செய்த செய்தி எதிரொலித்தபோது, சென்னை கோட்டையில் தனது வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்திக் கொண்டி ருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

 

eps



28-ம் தேதி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் எடப்பாடி, 22-ம் தேதி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை கோட்டைக்கு அழைத்தார். எடப்பாடியுடன் வெளிநாடு செல்லும் டீமில் இடம் பெற்றிருக்கும் அவரது ஆல் இன் ஆல் பி.ஏ. கிரிதரன் மற்றும் செயலாளர் விஜயகுமாருடன் சேர்ந்து இருநாட்டு தூதரக அதிகாரிகளிடம் வெளிநாட்டு பயணம் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அந்த ஆலோசனையை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் வெளிநாட்டு விசிட் சம்பந்தமாக விவாதித்தார். சுகாதாரம், தொழில்துறை, எரிசக்தி, கல்வி, பால்வளம் ஆகியவை முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் இடம் பெறப்போகும் துறைகள்.


சுகாதாரத்தை பொறுத்தவரை ஏர் ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவது, கல்வித்துறையில் டிஜிட்டல்மய மான கல்விமுறையை கொண்டு வருவது, எரிசக்தி துறையில் சூரிய ஒளி மின்சார திட்டங்கள், தொழில்துறையில் தொழில் முதலீட்டாளர்கள் ஊக்குவிப்பு, பால்வளத்தில் பண்ணைகளை வளர்க்கும் விதம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தொழில்துறையில் அன்னிய முதலீட்டை கொண்டு வருவது என்பது தொடர்ந்து செய்யப்பட வேண்டிய முயற்சி' என தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் ஃபாரின் விசிட் பற்றிய துறை வாரியான கூட்டங் களில் சொல்லி வருகிறார். ஆனால் எடப்பாடி தனது ஃபாரின் விசிட் பற்றி யாரிடமும் பேசுவதில்லை. அவரது அசைவுகள் மிகவும் ரகசியமானதாக இருக்கின்றன. பிரதமர், உள்துறை அமைச்சர் இவர்களிடம் மட்டுமே வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்கு ஒரு ரகசிய காரணம் இருக்கிறது.

பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தொழிலதிபர் அதானி இலங்கையில் துறைமுகத் துறையில் ஒரு பெரிய கட்டுமானத்தை செய்ய இருக்கிறார். அதில் அதானியுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற இருக்கிறார்கள். அதுபற்றிய பேச்சுகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் இருந்தே அமெரிக்காவுக்கும் அ.தி.மு.க.விற்கும் ஒரு தொடர்பு இருந்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு அமெரிக்காவில் உதவியாக இருந்த தொழிலதிபர் தற்பொழுது எடப்பாடிக்கும் உதவியாக இருக்கும்படி பா.ஜ.க. கேட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்கா-இங்கிலாந்து அரசுகளும் பாதுகாப்பு தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் முதலீட்டை வரவேற்கின்றன. இஸ்ரேலும் தற்பொழுது சிவப்புக் கம்பளம் நீட்டி வரவேற்கிறது. அங்கு முதலீடு செய்வது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இஸ்ரேல் நாட்டுக்கு போய் வந்து விட்டார். எடப்பாடியும் "நான் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வேன்' என சேலத்தில் பேசியிருக்கிறார்'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.