Skip to main content

"திருமாவளவனை மட்டுமல்ல அன்புமணியையும் கட்டியணைப்பேன்" - திமுக எம்.பி தடாலடி!

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

இந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் கவனிக்கப்பட்டவை வாரணாசி, அமேதி, வயநாடு போன்ற தொகுதிகள் என்றால் தமிழக அளவில் கவனிக்கப்பட்ட முக்கிய தொகுதிகளில் ஒன்றாக தருமபுரி இருந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மற்ற எல்லா தொகுதிகளிலும் மாஸ் காட்டிய அதிமுகவை தூக்கியெறிந்து 75 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றிபெற்ற பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணியே மீண்டும் தருமபுரியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு தோல்விதான் என்று பாமக தரப்பினர் கூறிவந்த நிலையில், திமுக வேட்பாளராக களமிறங்கி அன்புமணியை எதிர்த்து வெற்றிபெற்றவர் மருத்துவர் செந்தில். அவர் நக்கீரனுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அவரிடம் பேசுவோம்...

 

dr.senthil



தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கிட்டத்தட்ட 70,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளீர்கள். இந்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த வெற்றி கடந்த 5 ஆண்டுகளாக என்னை கடுமையாக தயார் செய்ததால் கிடைத்த ஒன்றாகவே கருதுகிறேன். ஒரு நல்ல வேட்பாளர் திமுகவில் இருந்து போட்டியிட்டால் நிச்சயம் இங்கு வெற்றிபெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்காகவே கடந்த  சில ஆண்டுகளாக தீவிரமான தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வந்தேன். அந்த உழைப்புக்கான வெற்றியாகவே இதனை கருதுகிறேன்.

கருத்துக்கணிப்புகளில் கூட பாமக வெற்றிபெரும் என்று சொல்லப்பட்ட நிலையில், திமுக சார்பாக போட்டியிட்ட நீங்கள் வெற்றிபெற்றுள்ளீர்கள். அன்புமணிதான் உங்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்று நீங்களே விரும்பினீர்கள் என்றும் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். அவரே வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். தேர்தல் களம் கடுமையாக இருந்ததாக உணர்கிறீர்களா?

நிச்சயமாக... எதிர்த்துப் போட்டியிடுபவர் பலமாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்தேன். கிட்டதட்ட 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று எதிர்பார்த்த நிலையில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். அன்புமணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். கடந்த முறை அன்புமணி கிட்டத்தட்ட 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். கடந்த தேர்தலில் அனைத்து சமுதாயம் vs ஒரு குறிப்பிட்ட சமுதாயம் என்ற அடிப்படையில் அந்தத் தேர்தலை தருமபுரி மக்கள் பார்த்தார்கள். அந்த வகையில் இந்தத் தேர்தல் முடிவு எனக்கு திருப்தியை கொடுத்துள்ளது. பாமகவும் கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கும், அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


தருமபுரி மக்களவை தொகுதி பாமகவின் கோட்டை என்று கூறுகிறார்கள்... அதை எப்படி பார்க்கிறீர்கள்?

இல்லை... தருமபுரி தொகுதி பாமகவின் கோட்டை என்ற தகவல் தவறானது. ஏனெனில், கடந்த 25 ஆண்டுளில் 20 ஆண்டுகள் மற்ற கட்சியினரே அங்கு வெற்றி பெற்றுள்ளனர். அதனால் பாமகவின் கோட்டை என்பது தவறான புரிதல். தருமபுரி திமுகவின் கோட்டைதான். தலைவரிடம் வாய்ப்பு கேட்டபோதே நான் அதை அவரிடம் தெரிவித்தேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால், தருமபுரி திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என்று கூறினேன். அவ்வாறே வெற்றிபெற்றுள்ளோம். இந்த வெற்றியை வரும் தேர்தலிலும் தொடர்வோம்.

பல இடங்களில் நீங்கள் பிரச்சாரம் செய்யும் போது இடையூறு ஏற்பட்டதாகவும், அதனால் நீங்கள் பிரச்சாரம் செய்யாமல் பாதியில் சென்றதாகவும் தகவல்கள் வெளியானதே?

அப்படி எந்த இடத்திலும் பிரச்சாரம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் எப்படி எங்களின் பயணத்திட்டங்களை வரையறுத்து வைத்திருந்தோமோ அந்த இடங்களில் எல்லாம் பிரச்சாரம் செய்தோம். ஒரு இடத்தில் மட்டும் இளைஞர் ஒருவர் வாகனத்தை குறுக்கே போட்டார். அவரிடமும் பேசி, குறிப்பிட்ட அந்த இடத்திலும் பிரச்சாரம் செய்தோம்.

 

 

dr.senthil with thirumavalavan



சில இடங்களில் நானும் அதே சமூகத்தை சேர்ந்தவன்தான் என்று பேசியிருக்கீங்களே..?

அது பாமகவுக்காக சொல்லப்பட்ட ஒன்று. அதையும் தாண்டி வாக்கு அரசியல் என்பது முற்றிலும் வேறான ஒன்று. தேர்தல் வெற்றிக்கு வாக்கு அரசியல் மிக முக்கியமான ஒன்று. அன்புமணி தரப்பு அதனை கடுமையாக செய்ததால் அதனை நாங்கள் செய்யவேண்டிய நிலைக்கு ஆளானோம். அதுவும் சில இடங்களில்தான். நான் என்னுடைய பிரச்சாரத்தில் கேட்டதெல்லாம் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், சிறப்பாக செய்ல்படுவேன் என்றுதான். அதற்கு மக்கள் அங்கீகாரம் தந்துள்ளார்கள்.

இந்த வெற்றி பாமகவுக்கான பதிலடினு சொல்லியிருந்தீங்க.. மேலும் அன்புமணி ராஜ்யசபாவுக்கு வர வேண்டும் என்றும் கூறியிருந்தீர்களே?

பதிலடினு நான் சொல்லவில்லை. அதிமுக அன்புமணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அவரும் வரட்டும். இணைந்தே மக்களுக்கு நன்மை செய்வோம். அது கொள்கை அடிப்படையில் இல்லாமல் இருந்தாலும் மக்களுக்காக இணைந்ததாக இருக்கும். எனக்கு இணைந்து செயல்படுவதில் எந்த ஈகோவும் இல்லை.


ஏன்... கொள்கை அடிப்படையில் என்றால் பதற்றமடைகிறீர்கள்... பல தேர்தல்களில் பாமகவுடன் திமுக கூட்டணியில் வைத்துள்ளீர்களே?

அவங்க கொள்கை வேறு... இந்த தேர்தல்ல கூட அவங்க திமுக கூட்டணிக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். அப்படி வந்திருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. என்னை தலைவர் நம்பினார். அவரின் நம்பிக்கையை நான் காப்பிற்றியுள்ளேன்.

வெற்றிக்குப் பிறகு நீங்கள் கூட்டணி கட்சித் தலைவர்களை நீங்கள் சந்தித்து பேசியிருந்தாலும், திருமாவளவனுடனான சந்திப்பு பரபரப்பானதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆமாம். நானும் அந்தப் புகைப்படத்தை பார்த்தேன். நான் இயற்கையாகவே கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்திக்கும்போது கட்டிப்பிடித்துதான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன். மற்ற கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது, நான் இவ்வாறே செய்தேன். திருமாவளவனை சந்தித்த புகைப்படம் மட்டும் வைரலானது எதிர்பாராதது.

அப்படி என்றால் அன்புமணியை சந்தித்தால் இதே போன்று கட்டியணைப்பீர்களா?

நிச்சயமாக... அவரின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி அவரை சந்திக்க எனக்கு அனுமதி கிடைத்தால் அவரை நிச்சயம் கட்டியணைப்பேன்.
 

 

அடுத்த பகுதி:

வாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா? திமுக எம்.பி. செந்தில் பேட்டி
 

 

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.