Skip to main content

தினகரன், கமல் - மோடியின் ஸ்பெஷல் உளவுத்துறை ஸ்கெட்ச்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

அ.தி.மு.க-தி.மு.க. இருதரப்பும் பதட்டத்துடன் கவனிக்கக்கூடியவராக இருக்கிறார் டி.டி.வி.தினகரன். அவரது அ.ம.மு.க.வுடன் எஸ்.டி.பி. கட்சி கைகோர்த்துள்ளது. பெரியளவில் கூட்டணி அமைக்காததற்கு பா.ஜ.க. போட்டுத் தந்த வியூகம்தான் காரணம் என திடீர் அதிர்ச்சி தருகிறது டெல்லி தரப்பு. 

 

ttv


டெல்லி தலைமையுடன் தொடர்பில் உள்ள அறிவுஜீவிகள் குழுவின் தமிழக வி.ஐ.பி. ஒருவர் நம்மிடம், ""தேர்தல் களம் பற்றி தெரிந்துகொள்ள மத்திய உளவுத்துறையைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் ஒரு உளவுத்துறையை 3 மாதங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டார் மோடி. இதில் அரசு அதிகாரிகள் யாரும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் 16 ஸ்பெஷலிஸ்ட்டுகள் கொண்ட டீம் செயல்படுகிறது.

 

kamal



தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணியைத் தாண்டி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமைப்பதில் இந்தக்குழு தந்த ஆலோசனைகள் முக்கியமானவை. அத்துடன், தினகரனைப் பற்றி மத்திய உளவுத்துறை சில  விபரங்களை சுட்டிக்காட்டியிருந்தது. அதனை ஆராய்ந்தபோது எடுக்கப்பட்ட முடிவுதான் பலே வியூகம்'' என்றார். 

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ""பா.ஜ.க.வுக்கும் பா.ஜ.க. கூட்டணி வைக்கும் அ.தி.மு.க.வுக்கும் எதிரான வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்குத்தான் செல்கிறது என தமிழகத்திலிருந்து, தங்களது குழுவினர் சொன்ன தகவல்களை டெல்லியில் இருக்கும் தலைமைக் குழு சீரியசாக எடுத்துக்கொண்டது. பா.ஜ.க.வை கடுமையாக தி.மு.க. விமர்சிப்பதாலும், பா.ஜ.க.வுக்கு எதிராக வேறு ஒரு கட்சியோ அல்லது புதிய முகமோ இல்லாததாலும்தான் இந்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு செல்கிறது. அந்த எதிர்ப்பு வாக்குகளை சுவீகரித்துக்கொள்ளும் வலிமையான ஒரு அரசியல் முகம் தேவை என மோடியின் உளவுத்துறை தேர்வு செய்த முகம்தான் தினகரன். 

 

modi



மோடியையும் அமித்சஷாவையும் சந்தித்த இந்த டீம், "பா.ஜ.க.வையும் அ.தி.மு.க.வையும் தினகரன் இன்னும் கூடுதலாக விமர்சித்தால் தமிழகம் முழுவதுமுள்ள சிறுபான்மையினர் உள்ளிட்ட எதிர்ப்பு வாக்குகள் அவரது  கட்சிக்குப் போக அதிக வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு போவதை தடுத்தாலே அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும்' என தெரிவித்தது. 

"ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து 1991-ல் நடந்த தேர்தலில் தி.மு.க. வாங்கிய 21 சதவீத வாக்குகள்தான் அக்கட்சியின் உண்மையான பலம். அ.தி.மு.க.வின் வலிமை ஜெ. மரணத்தின்போது 45 சதவீதமாக இருந்தது. இதில்,  தினகரனால் 7 சதவீதமும், எதிர்ப்புகளால் 8 சதவீதமும் என 15 சதவீத வாக்குகள் பிரிந்தாலும் 30 சதவீத வாக்குகள் அ.தி.மு.க.வில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளுக்குள்ள வாக்குகளை கணக்கிட்டால் 7 சதவீத வாக்குகள் கூடுதலாகி அ.தி.மு.க.வின் பலம் 37 சதவீதமாக இருக்கும்.

அதுவே, தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சதவீதத்தை கணக்கிட்டால் 30 சதவீதமாக (21+9) மாறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளான 8 சதவீதத்தையும் சேர்த்தால் 38 சதவீதமாக தி.மு.க. கூட்டணி வலிமைபெறும். அதனால்தான் எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க.வுக்கு போகாமல் தடுத்து வேறு திசையில் மாற்றிவிட்டால் தி.மு.க. கூட்டணியின் வலிமை குறையும்' என தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார் மோடி. அவர் தந்த அசைன்மென்ட்படி, தினகரனிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் அமித்ஷா. அவரது மகன் இருமுறை சென்னைக்கு வந்து தினகரனை சந்தித்து விவாதித்து சென்றார்.

"உங்கள் தலைமையில் பெரிய கூட்டணி அமைக்கக்கூடாது. நீங்கள் சிறுபான்மையினருடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்; பா.ஜ.க.-அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கலாம்' என வலியுறுத்தப்பட்டதை ஒருகட்டத்தில் ஒப்புக்கொண்டார் தினகரன். இதுதான் பா.ஜ.க உருவாக்கியுள்ள ரகசிய கூட்டணி'' என்று சுட்டிக்காட்டினார். 

இதுகுறித்து அ.ம.மு.க. சீனியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘""பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசு கட்சி, த.மா.கா., த.வா.க., முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்பட பல கட்சிகள் தினகரனிடம் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தின.  காங்கிரஸ் தலைமையும் கூட எங்களிடம் பேசியது. பா.ஜ.க. பிடியில் இருந்ததால் எல்லா கட்சிகளையும் உதறினார் தினகரன். வலிமையான கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க. கூட்டணிக்குள் செல்லாத இந்திய தவுஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக், எஸ்.டி.பி.ஐ.போன்ற முஸ்லீம் கட்சிகளை மட்டும் தனது கூட்டணிக்குள் இணைத்துக்கொண்டார் தினகரன். தி.மு.க. கூட்டணிக்கு செல்லும் வாக்குகளை தடுப்பதுதான் இதன் நோக்கம்''’ என்கின்றனர். 

பா.ஜ.க.-தினகரன் ரகசிய கூட்டணி பற்றி தமிழக பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "எங்களின் தேசிய தலைமை வகுத்த வியூகங்களில் இதுவும் ஒன்று. கமல் தனித்து நிற்பதன் பின்னணியிலும் இந்த வியூகம் உண்டு. தி.மு.க. ஆதரவு ஓட்டுகள் சிதறவேண்டும். அதேசமயம், தினகரனுக்கும் குக்கர் சின்னம் கிடைத்து வலிமையாகிவிடக்கூடாது. புது சின்னம் கிடைத்தால் பரவாயில்லை என தீர்மானித்தோம். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தினகரனும் கமலும் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்கள்'' என்கிறார்கள். 
 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.