Skip to main content

பாஜக போட்ட ஸ்கெட்ச்; காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த மூத்த தலைவர்

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

Congress veteran Mohan Singh Rathwa quits party joins BJP

 

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  வரும் 12 ஆம் தேதி இமாச்சலப்பிரதேசத்திலும், அடுத்த மாதம் 1 ஆம் மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத்திலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பொதுவாக, இந்த மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே இருமுனைப் போட்டி நடந்து வந்த நிலையில், ஆம் ஆத்மியின் வருகையால் தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

 

இந்த இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் இழந்த தங்களது அதிகாரத்தை மீட்டெடுக்கக் கடுமையாகப் போராடி வருகிறது. ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.  இமாச்சலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச்செயலாளர் தரம்பால் தாக்கூர் காந்த் உட்பட முக்கிய நிர்வாகிகள் 26 பேர் பாஜகவில் இணைந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது குஜராத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

 

Congress veteran Mohan Singh Rathwa quits party joins BJP

 

குஜராத்தில் உதய்ப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 10 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த தலைவர் மோகன் சிங் ரத்வா (78) தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ள அவர், வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார். 

 

பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் சிங் ரத்வா, எனது ஆதரவாளர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன் என்றும், பழங்குடியின மக்களுக்கு பாஜக அரசும், பிரதமர் மோடியும் செய்யும் பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பாஜக விரும்பினால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார். 

 

இப்படி கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும் அடுத்தடுத்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய, தினந்தோறும் புதுப்புது வகையில் சரிந்து கொண்டிருக்கும் காங்கிரஸ், பாஜகவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது எனக் கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.