Skip to main content

கேள்வி கேட்ட பி.பி.சி; பதிலளிக்க மறுத்த இந்தியா! 

Published on 28/01/2023 | Edited on 28/01/2023

 

The BBC questioned; India refused to respond!

 

குஜராத் முதல்வராக இருந்து இந்திய பிரதமராக மாறிய பின்பும் குஜராத் கலவரத்தின் கெடுவாசனை மோடியைத் துரத்தி வருகிறது.

 

குஜராத்தில் 2002ல் நடந்த கலவரத்தில் காங்கிரஸ் எம்.பி.யான எஸ்ஸான் ஜாஃப்ரி உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பலியானார்கள். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். இந்த கலவரம் குறித்து ஆவணப்படம் ஒன்றை பி.பி.சி. தயாரித்துள்ளது. இரு பகுதிகளைக் கொண்ட இந்த ஆவணப்படத்தின் பெயர் "இந்தியா: தி மோடி கொஸ்டின்'. ஜனவரி 17 ஆம் தேதி இதன் முதல் பகுதியை பி.பி.சி. ஒளிபரப்பியது. அதில் கலவரத்துக்கு மோடியே பொறுப்பு என கூறப்பட்டுள்ளதால் சர்ச்சையாகியுள்ளது.

 

இதுகுறித்து இந்திய தரப்பிலிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரச்சார நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதென்றும், பாரபட்சமும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் வெளிப்படையாகத் தெரிவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி விமர்சித்துள்ளார்.

 

இந்த ஆவணப்படத்துக்கு தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க. உள்பட அனைத்துத் தரப்பிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது. மேலும், தொடரில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் உரிமையையும் இந்திய அரசுக்கு வழங்கினோம். ஆனால் அது பதிலளிக்க மறுத்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளது.

 

குஜராத் கலவரத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததால் அன்றைய டோனி பிளேர் அரசு குஜராத் கலவரம் குறித்து விசாரணை ஒன்றை நடத்தியது. அந்த விசாரணை அமைப்பு அளித்த தகவல்கள் மூலமே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்தின் முன்னாள் உயர்மட்டத் தூதரக அதிகாரி, ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணை ராணுவ அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் இந்த வன்முறையைத் திட்டமிட்டு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

 

அன்றைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஜாக் ஸ்ட்ரா, குஜராத்தின் தலைமை பீடத்திலிருந்தவர்கள் கலவரத்தின்போது செயல்படவிடாமல் போலீஸை பின்னிருந்து கட்டுப்படுத்தியதையும், இந்துத்வவாதிகளை ஊக்குவித்ததையும் பற்றி இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பரந்தளவில் முஸ்லிம் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் ஆவணப்படம் தெரிவிக்கிறது.

 

இந்த ஆவணப்படம் இந்தியாவில் ஒளிபரப்பப்படவில்லை. இங்கிலாந்தில் செயல்படும் பிபிசி ஐபிளேயரில் மட்டுமே வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் அதனைப் பார்த்தவர்கள் மூலம் இந்தியாவிலும் யூடியுப்பில் சில பகுதிகள் பரவ, அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது இந்தியாவில் இந்த ஆவணப் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து இங்கிலாந்தின் அதிபர் ரிஷி சுனக், "உலகின் எந்தப் பகுதியில் அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

 

பி.பி.சி.யின் ஆவணப்படம் இந்துத்துவர்களையும், பா.ஜ.க.வினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.

 

க. சுப்பிரமணியன்

 

 

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.