Skip to main content

இதற்கெல்லாம் எதற்கு நிதி? கடன் கட்டாதவர்களை விட்டது ஏன்? பாஜகவால் அதிர்ச்சியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்!  

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

bjp



உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பேரிடியாக இறங்கி இருக்கிறது கரோனா வைரஸின் தாக்கம். இதை ஈடுசெய்ய நிவாரண நிதி கோரியது மத்திய அரசு. பெருமுதலாளிகள், திரைப் பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் இதற்கு உதவிவரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை பிரதரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.


இந்நிலையில்தான், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படியை 2021, ஜூலை வரை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மத்திய நிதியமைச்சகம் 23ந்தேதி வெளியிட்ட இதுதொடர்பான உத்தரவில், “குறைந்தபட்சம் 4% முதல் 6 மாதங்களுக்கும், 8% அடுத்த ஆறு மாதங்களுக்கும், 12% அடுத்த ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படாது. நிறுத்தி வைக்கப்பட்ட இந்த அகவிலைப்படி பிறகு வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், “டி.டி.எஸ். என்ற பெயரில் வருமானவரியை முன்னதாகவே செலுத்திவிட்டு, மாத ஊதியம் பெரும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்று கொந்தளித்து வருகிறார்கள்.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்க்கும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியன், "ஆவக்காய் ஊறுகாய் தயாரிப்பதையும், நாட்டின் பொருளாதார கொள்கையையும் ஒரேமாதிரி கையாளுகிறது மத்திய அரசு. அதன் தவறான பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி ஏறி, பணப்புழக்கம் குறைந்திருக்கும் இந்தச் சூழலில், இப்படியொரு மோசமான முடிவை எடுத்திருக்கிறது.

 

x



பெருமுதலாளிகளிடம் இருந்து அரசு வங்கிகளுக்கு வரவேண்டிய பல லட்சம் கோடி வாராக்கடன்களை வசூல் செய்யாமல், பேரிடர் காலங்களில் பயன்படுத்த வேண்டிய தற்செயல் மற்றும் அவசரகால நிதிகளைப் பயன்படுத்தாமல், புல்லட் ரயில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்காக ஒதுக்கிய நிதியில் கைவைக்காமல், மோசமான சூழலிலும் மக்கள் பணியில் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் கைவைப்பது கண்டனத்திற்குரியது''’என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

“கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்தை எட்டியும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காதது, விலைவாசியைக் குறைக்காமல் சுங்கக் கட்டணத்தை அதிகப்படுத்தியது போலவே இதுவும் மக்கள்விரோத நடவடிக்கைதான் என்கிறார்கள் மத்திய அரசு ஊழியர்கள்.


--ச.ப.மதிவாணன்

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.