Skip to main content

நிரம்பி வழிந்த டாஸ்மாக்! -தமிழ்நாட்டின் குடிப் பெருமை!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020
ddd

 

கரோனா ஏற்படுத்திய பொருளாதாரத் திணறலால், இந்த வருட தீபாவளி வியாபாரம் ரொம்பவே டல் அடித்திருக்கிறது. குறிப்பாக ஜவுளி, மளிகை, மட்டன், சிக்கன், பலகாரம் வெடி உள்ளிட்டவைகளின் வியாபாரம் பாதிக்கும் குறைவாய் படுத்துவிட்ட நிலையில், டாஸ்மாக் விற்பனை மட்டும் தள்ளாடாமல் ஸ்டெடியாய் எகிறிச் சென்று அரசின் கல்லாவை ஏகத்துக்கும் நிறைத்திருக்கிறது.

 

தமிழகம் முழுவதும் 5330 டாஸ்மாக் சில்லறைக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் வருகிறது. இது சிறப்பு விடுமுறை நாட்களில் மட்டும் 150 கோடி ரூபாய்வரை எகிறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இது 600 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பே திகைப்பு விலகாமல் சொல்கிறது.

 

தீபாவளிக்கு முதல்நாளான 13-ஆம் தேதி 228 கோடி ரூபாய்க்கும், தீபாவளி நாளான 14-ஆம் தேதி, 238 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையானதால் டாஸ்மாக் தரப்பு கிக்கில் இருக்கிறது.

 

அதில் மதுரை மண்டலத்தில் மட்டும் 104 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 95 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 94 கோடி ரூபாய்க்கும் சரக்குகள் விற்பனையாகி உள்ளதாம். "அனைத்து மாவட்டங்களிலுமே இந்த ஆண்டின் விற்பனை சூடுபிடித்துக் காணப்பட்டது' என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள். கடந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை 355 கோடியாக இருந்தது. அது இந்த ஆண்டு கிடுகிடுவென இரு மடங்கு ஆகியிருக்கிறது.

 

கரோனாவால் பெரும்பாலான குடும்பங்கள் வறுமை யில் தள்ளாடிவரும் நிலையில், இந்த இருமடங்கு விற்பனை எப்படி சாத்தியமானது?

 

நம்மிடம் பேசிய தகவல் பெறும் உரிமை ஆர்வலர் லப்பைக்குடிகாடு சாகுல்ஹமீது, விசேஷ நாட்களில் நட்பு விருந்து என்ற பெயரில் மது விருந்து நடத்தும் கலாச்சாரம் அதிகரித்திருக்கிறது. இப்போது திருமணம், காது குத்து, குலதெய்வ வழிபாடு என எந்த நிகழ்ச்சி நடந்தாலும் மது விருந்து நடக்கிறது.

 

அதேபோல் முக்கிய அரசியல் கட்சிகள், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவரையும் கவனிக்கின்றன. குறிப்பாக கட்சிகளின் கீழ்மட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கும்போதே, மதுபாட்டில்களையும் வழங்கிவிடுகிறார்கள். இளைஞர்களின் வாழ்க்கை கெடுவது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இங்கிருக்கும் அரசும் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக சொல்லிக்கொண்டே, விற்பனையைப் பெருக்குகிறது.

 

"தேசிய நெருஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடவேண்டும்' என்று நீதிமன்றங்கள் சொன்ன பிறகும், "நெடுஞ்சாலை ஓரம் குறிப் பிட்ட தூரத்திற்கு அப்பால் கடை வைக்கலாம்' என்று, அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்றிக் கொண்டு, டாஸ்மாக் கடைகளை வைத்து, வசூல் வேட்டை நடத்துகிறது என்கிறார் வருத்தமாய். நெடுஞ்சாலை பக்கம் கடையின் முதுகையும், எதிர்ப்பக்கம் வாசலையும் வைத்து வியாபாரம் செய்யும் டெக்னிக்கையும் டாஸ்மாக் நிறுவனம் கண்டுபிடித்து செயல்படுத்தியது.

 

"மக்கள் விழிப்புணர்வுமைய' பொறுப்பாளர் நெய்வேலி செல்வமோ, இந்த ஆண்டு டாஸ்மாக் வியாபாரம் 600 கோடி ரூபாய்க்கு என்று சொன்னால், அதில் தமிழக அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் வருமானம் இருந் திருக்கும்? இதில் மதுபான அதிபர்கள் எத்தனை கோடி ரூபாய் லாபம் சம்பாதித் திருப்பார்கள்? அரசுக்கு வருமானம் வேண்டும் என்பதற்காக டாஸ்மாக்கை அனுமதிப்பதாகச் சொல்லும் அரசு, டாஸ்மாக்கை நடத்துவது போலவே, மதுபான ஆலையையும் நடத்தி அதன் மூலம் முழு லாபத்தையும் பார்க்கலாமே? ஏன் அதைச் செய்யவில்லை?

 

இன்று டாஸ்மாக் வியாபாரம் அதிகரிக்கிறது என்றால் நாம் சந்தோசப்படாமல் வெட்கப்படவேண்டும். இது அரசுக்குக் கிடைத்த வெற்றியல்ல. ஏனென்றால் இன்று மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி உழைக்கும் பெண்கள் வரை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அதோடு குடியால் குற்றங்களும் பெருகி வருகின்றன. இதற்கெல்லாம் அனுசரணையாக இருப்பது அரசு நடத்தும் டாஸ்மாக்தான். இவர்கள் ஒரு சமூகத்தையே சீரழித்து விட்டுதான் அரசாங்கத்தை நடத்தவேண்டுமா?'' என்று காட்டமாகவே கேட்கிறார்.

 

"டாஸ்மாக் விற்பனையால் அரசுக்குக் கிடைக்கும் லாபம் என்பது, பாவத்தின் சம்பளம் என்பதை உணரவேண்டியவர்கள் உணர்வார்களா?' என்ற கேள்விக்கு நியாயமான பதில் கிடைக்காது. ஏனென்றால், "கரோனா காலத்தில் ஏற்பட்ட அரசின் வரி இழப்புகளை சரிக்கட்டுபவை பத்திரப் பதிவுகளும், டாஸ்மாக் வியாபாரமும்தான்' என்று அரசே புள்ளிவிவரம் வெளியிட்டு வருகிறது.

 

 

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.