Skip to main content

எளிய மக்கள் மீது நடக்கும் அவலம் - ‘அநீதி’ விமர்சனம்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Aneethi movie review

 

வெயில், அங்காடித் தெரு படம் மூலம் எளிய மனிதர்களின் கதையை உருவாக்கி விருதுகள் பெற்று கவனம் ஈர்த்த இயக்குநர் வசந்தபாலன் ஜெயில் படத்திற்குப் பிறகு கையில் எடுத்திருக்கும் திரைப்படம் அநீதி. இந்தத் தடவை உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களின் வலியைக் கூற முயற்சி செய்து எடுத்திருக்கும் அநீதி படம் வசந்த பாலனின் முந்தைய படங்களைப் போல் கவனம் பெற்றதா, இல்லையா?

 

உணவு டெலிவரி பாயாக இருக்கும் அர்ஜுன் தாஸ், தினசரி தான் டெலிவரி செய்யும் வீடுகளில் பல்வேறு அவமானங்களுக்கு இடையே உணவு டெலிவரி செய்து வருகிறார். இதனாலேயே அவருக்கு ஓசிடி என்னும் மன நோய் ஏற்படுகிறது. இதனால் தன்னை அவமானப்படுத்துபவர்களை எல்லாம் கொலை செய்வது போல் அவருக்கு எண்ணம் ஏற்படுகிறது. இதற்காக அவர் ஒரு மனநல மருத்துவரை அணுகி ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார். இதற்கிடையே அவர் உணவு டெலிவரி செய்ய இசிஆரில் இருக்கும் ஒரு பெரிய பங்களாவிற்குச் செல்கிறார். போன இடத்தில் துஷாரா விஜயனுடைய நட்பு ஏற்படுகிறது. அதுவே நாளடைவில் காதலாக மாறி இவரது மன நோயையும் சரி செய்கிறது. இருவரும் சந்தோஷமாகக் காதலித்து வருகின்ற சமயத்தில் ஒரு நாள் இரவில் துஷாரா விஜயனின் முதலாளி அம்மாவிடம் இருவரும் மாட்டிக் கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து, அந்த முதலாளியம்மா அடுத்த சில மணி நேரத்தில் இறந்து விடுகிறார். முதலாளி அம்மாவின் பிள்ளைகளுக்கும், போலீசாருக்கும் அவர் எப்படி இறந்தார் எனச் சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் அர்ஜுன் தாசும், துஷாரா விஜயனும் கொலை குற்றத்திற்கு ஆளாகின்றனர். இதையடுத்து அந்த முதலாளியம்மா எப்படி இறந்தார்? இந்தக் கொலை குற்றத்தில் இருந்து இருவரும் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே அநீதி படத்தின் மீதிக் கதை.

 

ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணிபுரியும் உணவு டெலிவரி பாய்ஸ்களுக்கு நடக்கும் அநீதிகளையும், எளிய மனிதர்கள் மீது சட்டங்கள் சமமாக இருந்ததா அல்லது அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட்டதா என்பதையும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். உணவு டெலிவரி செய்யும் நபர்களின் வாழ்க்கையையும், அவர்களது வலியையும் நம்முள் மிக எளிமையாக கடத்தி அதை உணரும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். அதேபோல் எளிமையானவர்கள் மீது சட்டம் எவ்வாறு பாய்கிறது. காவல் நிலையங்களில் அவர்கள் மீது நடக்கும் அநீதிகளையும் மிக ஆழமாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இருந்தும் கதை ஆரம்பிக்கும் சமயத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர்களின் வாழ்க்கையைக் காண்பித்து விட்டு, பிறகு கதை வேறு ஒரு திசையில் நகர்ந்து கொலை, குற்றம், வழக்கு என பயனித்து பிறகு அழுத்தம் நிறைந்த கண் கலங்க வைக்கும்படியான பிளாஷ்பேக் உடன் நகர்ந்து, பிறகு மீண்டும் உணவு டெலிவரி செய்யும் நபர்களின் போராட்டம், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து படம் நிறைவடைகிறது.

 

Aneethi movie review

 

ஒரு விஷயத்தை வைத்துத் தொடங்கும் திரைப்படம் அதன் சாராம்சங்களுடனே பயணித்து முடியும் பட்சத்தில் அது கவனம் பெறும். ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் சமயத்தில் ஒரு கதையும், நடுவே வேறு ஒரு கதையும், முடிவில் வேறு ஒரு கதையுமாக அமைந்து, மூன்றும் ஒரு புள்ளியில் சந்திப்பது போல் திரைக்கதை அமைத்து படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். அது இப்படத்திற்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பது போகப் போகத் தெரியும். இருந்தும் வசந்த பாலனின் எதார்த்தமான காட்சிகள் ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்து குறிப்பாக பிளாஷ்பேக் காட்சியில் வரும் அர்ஜுன் தாஸ் மற்றும் காளி வெங்கட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்து, அதில் நடித்த நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்து இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கின்றனர். இறுதிக்கட்ட காட்சிகள் கண்களைக் குளமாக்கிப் படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளது. தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு எளிய மனிதர்களின் வலியை வேதனையுடன் படமாக்கும் இயக்குநர் வசந்த பாலன் இப்படத்திலும் அதையே செய்திருக்கிறார்.

 

மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், இப்படம் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று கைத்தட்டல் பெற்று இருக்கிறார். சின்னச் சின்ன முக பாவனைகள், வசன உச்சரிப்புகள் என இவரது சிறப்பான நடிப்பு படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது. இவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் நாயகி துஷாரா விஜயன். பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டுப் பெண் போல் தோன்றியிருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர், அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கி அதற்கேற்றார் போல் தன் எதார்த்த நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்று இருக்கிறார். இவர் பயந்து பயந்து, நடுங்கி அழுகின்ற காட்சிகள் எல்லாம் சிறப்பாக நடித்து அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். பிளாஷ்பேக்கில் சில காட்சிகளிலேயே வந்தாலும் தன் எதார்த்த படிப்பை மிக மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, குறிப்பாக தென்மாவட்ட வட்டார வழக்கை தன் சிறப்பான வசன உச்சரிப்புகள் மூலம் கொடுத்துக் கைதட்டல் பெற்று இருக்கிறார் நடிகர் காளி வெங்கட். இவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து படத்தைக் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இவரது அப்பாவியான நடிப்பு பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்திருக்கிறது.

 

முதலாளி அம்மாவாக வரும் ஜெயன் வில்லத்தனமான நடிப்பில் சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல், அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்கரவர்த்தி, அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, சாரா ஆகியோரும் வில்லத்தனமான நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர். இவர்கள் வரும் காட்சிகள் எல்லாம் பார்ப்பவர்களுக்கு எரிச்சல் ஏற்படும்படி நடித்து கவனம் பெற்று இருக்கின்றனர். அர்ஜுன் தாஸ் நண்பராக வரும் பரணி, அவர் வேலையைச் செய்து விட்டு சென்றிருக்கிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும் சிரிப்பலையை உருவாக்க முயற்சி செய்து விட்டு சென்றிருக்கிறார் அறந்தாங்கி நிஷா. 

 

எட்வின் சாக்கிய ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஜிவி பிரகாஷ் தன் இசையில் மிரட்டி இருக்கிறார். அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் காதல் பாடல் மற்றும் பின்னணி இசை சிறப்பு.

 

படம் ஆரம்பித்து ஒரு கதையில் தொடங்கிப் போகப் போக வேறு ஒரு கதையில் பயணித்து அங்கும் இங்குமாகச் சுற்றி மறுபடியும் வந்த இடத்திலேயே முடிந்திருப்பது சற்று அயற்சி ஏற்படும் படி இருந்தாலும், எளிய மக்கள் மீது நடக்கும் அவலங்களையும், அநீதிகளையும் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பது படத்தை நிமிரச் செய்து கரை சேர்க்க உதவி இருக்கிறது.

அநீதி - எளியவர்களின் வலி!


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“அந்த கதாபாத்திரமாகத் தோற்றமளிக்கிறார்கள்” - வசந்த பாலன் பாராட்டு

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vasantha balan praised gv kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் வசந்த பாலன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “நேற்று கள்வன் திரைப்படம் பார்த்தேன். இரண்டு திருடர்களின் வாழ்வில் பாரதிராஜா சாரும் யானையும் நுழையும் போது என்னாகிறது? என்கிற கதையில் கிராமம், அசலான கிராமத்து மனிதர்கள் என திரைப்படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஜி.வி பிரகாஷும் பாரதிராஜா சாரும் அந்த கதாபாத்திரமாக தோற்றமளிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

vasantha balan praised gv kalvan movie

ஆர்யா, “டார்லிங் ஜி.வி ப்ரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் சுவாரசியமான பின்னணியில் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. எமோஷ்னலாக பெரிதளவு கனெக்ட் ஆகிறது. பாரதிராஜா சார் அற்புதமாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷுடன் அவரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருக்கிறது. நெகட்டிவ் ஷேடில் ஜி.வி பிரகாஷ் நடித்திருப்பது எதிர்பாராத ஒன்று. அதை சரியாக பண்ணியுள்ளார்” என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ்,அவரது எக்ஸ் பக்கத்தில் “கள்வன் ஒரு யதார்த்தமான த்ரில்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை சுவாரஸ்யமாக்கும். ஜி.வி பிரகாஷ் மீண்டும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக யானையோடு அவர் துரத்தும் காட்சி சிறப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.