Skip to main content

'கொடல் உருவுற சம்பவம் உறுதி' - விஜய்யை விவரிக்கும் அனிருத்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

vijay leo second single badass released

 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல் மற்றும் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ மற்றும் சமீபத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  

 

அதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக விஜய்யின் பேச்சு மற்றும் குட்டிக் கதைக்காக அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதையடுத்து இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாகத் திடீரென்று படக்குழு அறிவித்தது. இதற்கு "விழாவுக்கான பாஸ்கள் அதிகம் கேட்டு கோரிக்கைகள் வருகின்றன. மேலும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி புது அப்டேட்டுகள் வெளியிடுவோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து படக்குழு குறிப்பிட்டது போல தொடர்ந்து அப்டேட் வெளியிட்டு வருகிறது. படத்தின் இரண்டாவது சிங்கிள் 'படாஸ்' (Badass) இன்று வெளியாகும் என அறிவித்தது. இதனை முதல் பாடல் எழுதிய விஷ்ணு எதாவன் எழுதியுள்ளார். பின்பு இன்று நள்ளிரவு 12 மணிக்கு அந்த பாடலின் கிளிம்ஸ் வெளியானது. அதில் இன்று மாலை 6 மணிக்கு இந்த பாடல் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இதனிடையே இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர காவல்துறையினருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

 

இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான 'படாஸ்' (Badass) லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பாடலை பார்க்கையில், விஜய் கதாபாத்திரம் குறித்து விவரிப்பது போல் அமைந்துள்ளது. மேலும் வில்லன் சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் விஜய் ஆகிய மூன்று பேரும் இதில் வருகிறார்கள். மூவரும் தாஸ் என்று முடியும் பெயரை கொண்டு வருகின்றனர். அனிருத்தே இந்த பாடலையும் பாடியுள்ளார். 'சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து... இவன் வேட்டைக்கு சிதறனும் பயந்து... பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி... கொடல் உருவுற சம்பவம் உறுதி...' என்று வரும் வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது. 

 

 


 

சார்ந்த செய்திகள்