
ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை மறுத்த ரவி மோகன், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என கூறியிருந்தார்.
பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். இந்த சூழலில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒரு திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வு இன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் ஒரே கலர் உடையுடன் ஒன்றாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இது தொடர்பாக ஆர்த்தி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என் மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக... கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன். இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் எனக் கருதியதால் தான் அந்த விரதம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக் கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும் இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான்.
இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும்வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாகசென்று கொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒருமனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில்இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார். பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை என்தோள்களில் மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறேன். யாரும்அறியாமல் அந்தக் குழந்தைகள் சிந்தும் கண்ணீரையும் என் கைகள் தான் துடைத்துக்கொண்டிருக்கிறது. இன்று அவர்புதிதாக முளைத்தவர்களுடன் புதியதொரு உறவை உருவாக்கி கொண்டதால் பழைய உறவு இப்பொழுது வெறும் செங்கல்சுவர் போல அவர் கண்களுக்கு காட்சியளிக்கிறது. என் குழந்தைகளுக்கு அன்பும் அக்கறையும் கொடுப்பேன் என்ற அவரது வாக்குறுதியும் பறந்துவிட்டது. ஆனால் இன்றும் என்னை தான் பணத்தாசை பிடித்தவள் போல் சித்தரிக்கிறார்கள். அது மட்டும் உண்மை என்றால் இப்பொழுது அனைத்தையும் இழந்து நிற்கும் இந்த நிலையில் இல்லாமல் நான் சுயநலத்துடன் எப்பொழுதோ எனது பாதுகாப்பை கவனித்திருப்பேன். ஆனால் கணக்குபோட்டு வாழ்வதைவிட காதலுடன் வாழ்வது சிறந்தது என்று நான் முடிவெடுத்ததால் தான் இன்று இந்த நிலையில் நிற்கிறேன்.
இன்றும் அந்த காதலுக்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் அது பலவீனமாக புரிந்து கொள்ளப்படுவதை தான் தாங்க முடியவில்லை. இன்று என் குழந்தைகளுக்கு முறையே 10 மற்றும் 14 வயதாகிறது... அவர்களுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பும், உறுதியும் மிகமுக்கியம். இன்று நடந்துகொண்டிருக்கும் சட்டவிவகாரங்களை புரிந்துகொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் கைவிடப்பட்டதன் வலி அவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். எடுக்கப்படாத தொலைபேசி அழைப்புகள், நிராகரிக்கப்பட்ட சந்திப்புகள், போலி சமாதான வாக்குறுதிகள் இவைஅனைத்தும் காயங்களாக எங்கள் நெஞ்சில் இருக்கிறது. இன்று நான் ஒரு மனைவியாகவோ, அல்லது குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் ஒரு பெண்ணாகவோ பேசவில்லை. தன் குழந்தைகளின் நலனை காக்க நினைக்கும் தாயாக மட்டுமே குரல் எழுப்புகிறேன். நான் இதை செய்யதவறினால் நானும் அவர்களை கைவிட்டதாகிவிடும்.
இன்று உங்கள் நிலையை நீங்கள் உயர்த்திக்கொள்ளலாம், உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் ஆனால் உண்மையை மாற்ற முடியாது. அப்பா என்பது உறவுமட்டுமல்ல அது ஒரு உயர்ந்த பொறுப்பு. இன்று எங்கள் வாழ்க்கையில் குறுக்கே வந்தவர்களால் என் குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியம் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிந்தும் கண்ணீர் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. என் வார்த்தைகளை நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அந்த எதிரொலிக்கு நீங்கள் செவிசாய்த்து தான் ஆக வேண்டும். எங்களை உற்றுப் பார்ப்பவர்களுக்கும், எங்களின் நலன்விரும்பிகள் என்று அடையாளம் காட்டிக்கொள்பவர்களுக்கும் ஒன்று, இன்றும் எனது இன்ஸ்டாகிராம் ஐடி ஆர்த்திரவி என்ற பெயரில் தான்உள்ளது. சட்டம் முடிவு செய்யும் வரை அது அப்பெயரிலேயேநீடிக்கும். அன்புள்ள ஊடகவியலாளர்களுக்கு என்னை நீங்கள் அவரது முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்த வேண்டாம். அந்த முடிவை சட்டம் எடுக்கும் வரை அமைதி காப்போம். இப்பொழுதும் பழிவாங்கவோ பரபரப்புக்காகவோ நான் பேசவில்லை, என் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவே போராடுகிறேன். இன்றும் உங்களை அப்பா என்று அழைக்கும் அந்த இரு மகன்களுக்காக என் கண்ணீரை, கதறல்களை, கசப்பான அனுபவங்களை மறைத்துக் கொண்டு போல மேலும் மேலும் உயர்ந்து எழுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.