மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ளதாலும் மாரி செல்வராஜ் படம் என்பதாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
மேலும் உதயநிதியின் ரசிகர்கள் திரையரங்கில் ஸ்வீட் கொடுத்தும் வெடி வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தைப் பார்த்த கமல், தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்தியிருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் வாழ்த்தியிருந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உதயநிதி, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது உதயநிதியிடம், ‘படத்தில் சமூகநீதி பற்றி பேசியுள்ளீர்கள் நிஜத்தில் அது நடக்காமல் இருக்கிறது’ என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர், "அது இருந்துக்கிட்டு தான் இருக்கு. இந்த ஒரே படத்துல நாங்க சமுதாயத்தை திருத்த போறோம்னு சொல்லவில்லை. ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். எங்க வலியை நாங்க சொல்றோம். இதைத் தான் சொல்லியிருக்கிறோம். இதை மக்கள் உணர வேண்டும். அவங்களுக்கு இந்த விழிப்புணர்வு வந்து திருந்த வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் எப்போதும் துணை நிற்கும்" என்றார்.