கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், அரசு விதித்த ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்தது. தற்போது உலக நாடுகள் முழுவதிலும் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள கரோனா இரண்டாம் அலை, கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணாமாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு, புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் மீண்டும் மூடப்பட்டன.
மறு உத்தரவு வரும்வரை தியேட்டர்களைத் திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ரிலீசுக்குத் தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாக மீண்டும் அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த ஊரடங்கு சமயத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின. நிதி நெருக்கடி காரணமாக, சினிமா தயாரிப்பாளர்கள் ஓடிடியிலேயே புதுப்படங்களை வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘கடைசி விவசாயி’, ‘துக்ளக் தர்பார்’ ஆகிய 5 படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன. இதில் 'துக்ளக் தர்பார்' படத்தை ஓடிடியில் வெளியிட ஏற்கனவே பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாவது தற்போது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, திரிஷாவின் ‘ராங்கி’ உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.