
தனுஷ் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குபேரா’. தனுஷின் 51வது படமாக உருவாகியுள்ள இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் ஜிம் சர்பும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. வழக்கம் போல் தனுஷ் ரசிகர்கள் இன்று காலை முதல் திரையரங்க வளாகத்தில் பேனர், கட்டவுட், பேனர்கள் என கொண்டாடி படத்தை வரவேற்றனர். முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் தனுஷ் கண்டுகளித்தார். அவருடன் அவரது மகன் மற்றும் பட இயக்குநர் சேகர் கம்முலாவும் கண்டுகளித்தனர். திரையரங்கில் தனுஷை பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து அன்பை வெளிப்படுத்தினர். இதனால் தனுஷ் நெகிழ்ச்சியுடன் அவர்களுக்கு கைகூப்பி நன்றி சொன்னார்.
இந்த நிலையில் இப்படம் குறித்து சாய் பல்லவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “குபேரா பல காரணங்களுக்காக சிறப்புற இருக்கப் போகிறது. தனுஷால் மட்டுமே சவாலான கதாபாத்திரங்களை சிரமமின்றி நடிக்க முடியும். சேகர் கம்முலா இயக்கத்தில் நாகர்ஜூனா நடித்திருப்பது ஒரு விருந்தாக இருக்கப்போகிறது. டியர் ராஷ்மிகா, சேகர் கம்முலா தனது பெண் கதாபாத்திரங்களை எந்தளவு சக்திவாய்ந்ததாக எழுதுவார் என்று அனைவருக்கும் தெரியும். இது ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரமாக அமையப்போகிறது. அதோடு உங்களது பிளாக்பஸ்டர் வரிசையில் இதுவும் இடம் பெற போகிறது” என படக்குழுவின் முக்கியமான நபர்களை குறிப்பிட்டு படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.