Skip to main content

அஜித் படத் தயாரிப்பாளர் கைது

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
producer sivasakthi pandian arrest for check fraud case

தமிழில் காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், வெற்றிக் கொடி கட்டு உள்பட பல படங்களைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். இவர் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தயாரித்த படத்திற்காகப் பிரபல நிறுவனத்தில் 1 கோடியே 70 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என அந்த பிரபல நிறுவனம் குற்றம் சாட்டியது. 

மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிவசக்தி பாண்டியன் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பணத்தை திருப்பித் தர பல தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணம் கொடுக்க சிவசக்தி பாண்டியன் முன்வராததால் அவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி நுங்கம்பாக்கம் போலீசார் சிவசக்தி பாண்டியனை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்பு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.