Skip to main content

“நான் என்ன ரவுடியா?” - பா.ரஞ்சித் ஆதங்கம்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
pa.ranjith about madras movie

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர், பி.சி ஸ்ரீ ராம், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பா. ரஞ்சித் பேசுகையில், “அரசுப் பள்ளியில் படித்த மாணவன் தான் நானும். நம்ம ஊரில் படிக்கும் போது கெத்தா இருக்கும். ஆனால் அங்கிருந்து கொஞ்சம் வெளியே வந்தால், தாழ்வு மனப்பான்மை வருவதற்கான வாய்ப்பு நிறைய இருக்கு. நாம் கத்துக்கிற கல்வி போதுமானதாக இருக்கிறதா அல்லது நம்ம கத்துகிட்டது தான் கல்வியா என கேள்வி இருக்கிறது. நான் ஸ்கூல் படிக்கும் போது இங்கிலீஷில் ஃபையில். ஆனால் கல்வி கூடங்கள் ஒரு பாசிட்டிவான உணர்வை உருவாக்கியது. அது தான் எனக்கு ஒரு சுதந்திரத்தை கொடுத்தது. நான் படித்ததை விட வரைந்தது தான் அதிகம்.  நான் என்னவாக ஆக வேண்டும் என்ற யோசனையை கொடுத்தது அரசு பள்ளி மற்றும் கல்லூரி தான்.     

நான் சினிமாவில் ஒரு கதை சொன்னால் ரொம்ப டார்க்காக இருக்கு என சொல்வார்கள். மெட்ராஸ் பட கதையை சொன்ன போதும் இப்படித் தான் சொன்னார்கள். ஸ்லம் சார்ந்த கதைகள் என்றாலே ஒரு டார்க் பக்கம் என அவர்களது பார்வை. ஆனால் ஸ்லம்மில் வாழ்ந்த நான், என்னுடைய வாழ்க்கை டார்க்காக இருந்ததில்லை. பயங்கர கலர்ஃபுல்லாகவும், சந்தோஷமாகவும் கொண்டாட்டமாகவும் இருந்திருக்கிறது. ஒரு ஸ்லம்மின் வாழ்க்கை என்றாலே ரொம்ப இருட்டு, சோகம் போன்ற எண்ணங்கள் ஏற்கெனவே அவர்களுக்கு இருக்கு. அந்த எண்ணங்களை உடைப்பது பெரிய விஷயமாக பார்த்தேன். அதனால் தான் மெட்ராஸ் படத்தில் கலர்ஃபுல்லாக காட்ட வேண்டும் என எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உண்மையிலே ஒரு ஸ்லம் எப்படி இருக்குமோ அதை அப்படியே காண்பித்தோம். படத்தை பார்த்த சென்சார் போர்டு ஏ ப்ளஸ் சான்றிதழ் தருவதாக சொன்னார்கள். ஏன் என கேட்டதற்கு, ஸ்லம் பற்றி தான படமெடுத்திருக்கீங்க, ஸ்லம்மில் இருக்குற மக்களுக்கு மட்டும் காட்டுங்க, அதற்காக ஒரு சான்றிதழ் உருவாக்குகிறோம் என்றனர். அதோடு ரௌடிகளுக்கான படம் என்றும் சொன்னார்கள். நீங்கள் எப்படி ஸ்லம் பகுதியில் வாழும் மக்களை ரவுடிகளாக சித்தரிப்பீர்கள். நானும் அங்கிருந்துதான் வந்தேன். நான் ரவுடியா என வாதிட்டேன். ஆனால் மெட்ராஸ் படம் தமிழ் சினிமாவில் புது கோணத்தை உருவாக்கியது. இப்போது கொஞ்சம் ஈசியான பாதையாக மாறியிருக்கிறது. ‘ப்ளூ ஸ்டார்’ படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டாடியுள்ளனர். இந்த கோணத்தை இங்கிருக்கும் புகைப்படங்கள் மாற்றியிருக்கின்றன. பள்ளிக்கல்வி துறையின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது.

அதே போல் அட்டகத்தி படத்தை பார்த்துவிட்டு ஒருவர் இந்த படம் ஆரண்ய காண்டம் படம் போல் இருக்கிறது என்றார். இரண்டு படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. வெவ்வேறு கதைகளைச் சொன்னாலும், ஸ்லம் கதைக்களத்தில் நடப்பதாக இருந்தாலே ஒரேமாதிரி எண்ணம் தான் அவர்களுக்கு இருக்கு. அந்த கோணத்தை மாற்றுவது முக்கியம் என கருதுகிறேன்” என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

“கடன் வாங்கி கதை சொல்ல முடியாது” - மாரி செல்வராஜ் ஆதங்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
mari selvaraj about maamannan in pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் இன்று மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்பு படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  

அப்போது, மாமன்னன் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் மாரி செல்வராஜ். அதன் ஒரு பகுதியில், “மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். எங்க அப்பா ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். நான் சேரில் உட்காந்திருக்கேன். அவர் உட்காரவில்லை. அன்னைக்கு எங்க அப்பா உட்பட யாருமே ஃபீல் பண்ணவில்லை. ஆனால் எனக்கு அவர் உட்காரவில்லை என தோன்றியது. ஏன் என கேட்டபோது நாங்க உட்காரமாட்டோம் என்றார். சின்ன வயதில் நானே நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு பார்க்கும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அது ஒரு கதையாக மாறுகிறது. இன்றைக்கு பரியேறும் பெருமாள் பண்ணிட்டு போனபோது கூட, எங்க அப்பா அப்படித்தான் நின்னுகிட்டு இருந்தார். 

என்னுடைய படைப்பு 10 வருடம் கழித்து கேள்விக்கு உட்படுத்தப்படலாம். எனக்கு இன்றைக்கு உள்ள வலி, அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். ஒரு படைப்பாளியாக ஒரு சுமையை இறக்குகிறேன். எனக்கு விடுபடுவதற்கான வழி தான் இந்த சினிமா. என்னுடைய படைப்பு எதுவாக மாறும் என்பது தெரியாது. எனக்குள் இருக்கும் கோவத்தை மட்டும் கலையாக மாற்றுவதற்கு நான் விரும்பவில்லை. என் வாழ்க்கையை கலையாக மாற்றுவது ரொம்ப ஈஸி. என் வாழ்க்கையில் ஒரு அறம் இருக்கிறது என நம்புவது, அந்த அறத்தை படம் பிடித்துக் காட்டுவது, அதன் மூலம் மனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்துவது. இதைத்தான் என்னால் பண்ண முடியும். அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு கவலை கிடையாது.      

நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையைத்தான் படம் எடுத்துட்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். தனக்கு நடந்ததை எல்லாம் சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்கள் வாழ்கையும் கதைதான். 10 பேரோட வெற்றிக்கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது. நசுங்கி, பிசுங்கி காணாமல் போனவர்களின் கதையைத் தோண்டி எடுத்து, அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என சொல்லிக்கொண்டே இருக்கீங்க என கேட்பார்கள். வேறு வழி இல்லை. என்னுடைய கதையைச் சொல்லும் போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருத்தன் கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது. அந்தக் கதைக்குள் ஒரு முரண்பாடு இருந்தது என்றால், அதற்கு நான் ஒன்னும் செய்ய முடியாது. மறுபடி மறுபடி எனக்கு அப்படிப்பட்ட வாழ்க்கைதான் கொடுக்கப்பட்டது. அந்தக் கேள்விகளை நான் கேட்டுக்கொண்டுதான் இருப்பேன்” என ஆதங்கம் நிறைந்து பேசினார்.