Skip to main content

“அவரை பார்ப்பதைவிட பேச வைத்து கேட்டால் அழகாக இருக்கும்” - ரீஎண்ட்ரி கொடுக்கும் நடிகையை புகழ்ந்த நாசர்

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

Nassar

 

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் சர்வானாந்த கதாநாயகனாக நடிக்க அவருக்கு அம்மாவாக அமலா நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அமலா 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடிக்க, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகர் நாசர் பேசுகையில், “4 வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் டைம் மெஷின் தரை இறங்கியிருக்கிறது. ஒரு தயாரிப்பாளரே அழைத்து இயக்குநரிடம் கதை கேளுங்கள் என்று சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எஸ். ஆர். பிரபு அவருடைய நிறுவனத்தில் ஒரு படம் மாதிரி இன்னொரு படம் இருக்கக்கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பார். அவர் ஸ்ரீ கார்த்தியை கண்டுபிடித்தது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், சைன்ஸ் பிக்ஷன் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயம்.

 

இந்தியாவில் இது போன்ற படம் அதிகம் வருவதில்லை. ஸ்ரீ கார்த்திக் கதை கூறும்போது குழந்தையாக மாறிவிட்டேன். நிறைய பேசினோம், இந்த விஷயங்கள் புரியாது அந்த விஷயங்கள் புரியாது என்று பல மணி நேரம் சண்டைகூட போட்டேன். இந்தக் கதையை ஜுராசிக் பார்க் படத்தில் அந்தத் தாத்தா கூறுவதுபோல விளக்கமாக கூறினால்தான் புரியும் என்றேன். ஆனால் இப்படம் எனக்கு அற்புதமான பயணமாக இருந்தது. அறிவியலைப் பற்றியும், எதிர்காலத்தை பற்றியும் நிறைய விஷயங்களை பேசினோம். இந்த குழுவுடன் பணியாற்றியதில் 30 வயது குறைந்ததுபோல உணர்ந்தேன்.

 

ஒரு புத்தகத்தில் அழகான கதை இருக்கிறது என்றால் அதில் உள்ள காகிதங்கள்தான் நான். இது உண்மையாகவே ஒரு தாய்க்கும் மகனுக்கும் நடக்கும் கதை. அமலா அழகான ஆன்மா கொண்டவர். அறிமுக காலகட்டத்தில் இருந்தே அவர் எனக்கு பழக்கம். அவர் இந்த துறைக்கு மீண்டும் வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு டைம் ட்ராவல் தேவையே இல்லை. அப்போது இருந்தது போலவே இருக்கிறார். அவரை பார்ப்பதைவிட பேச வைத்து கேட்டால் அழகாக இருக்கும். பேச்சில் தெளிவு, பரிவு, பாசம் அனைத்தும் நிறைந்திருக்கும். ஆகையால்தான் நான் தள்ளி நின்று கேட்டுக்கொண்டே இருந்தேன்.

 

இப்படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் இந்த தருணம் மறுபடியும் கிடைத்தால் நான் தவறு செய்யும்போது அதை செய்யாமல் இருக்க முடியாதா என்று தோன்றும். ஒரு காலத்தில் கோட்பாடு ரீதியாக இது நடக்கக் கூடும். அதை இந்த படத்தில் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட 2 மணி நேரம் ஆகும். படத்திற்கு மேக்கப் போடுவது விலை உயர்ந்த விஷயம். இதற்காக பிரபு பெங்களூருவில் இருந்து சிறப்பு நிபுணரை வரவழைத்தார். 

 

ஷர்வானந்துடன் சில படங்களில் பழகியிருக்கிறேன். விடா முயற்சி என்பது பழக்கமான வார்த்தையாக இருந்தாலும், ஷர்வானந்துக்கும் பொருந்தும். ரீத்து வர்மா சிறு வயது முதலே என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் இருவரும் தீனி படத்தில் நடித்தோம். ஒரு சிறிய தீவு, அதிலிருந்து வெளியே போகவே முடியாது. ஒரு நாளில் 2 மணி நேரம்தான் கடல் உள்வாங்கும். அந்த சமயத்தில்தான் சென்று வர முடியும். அந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு நடிக்கக் கூடியவர். இப்படத்திற்கும் அவருடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் எல்லாருடைய மனங்களையும் போய் சேரும்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூஜையுடன் பணிகளைத் தொடங்கிய சங்க நிர்வாகிகள்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nadigar sangam building works start again with pooja

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்த பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

nadigar sangam building works start again with pooja

இந்த நிலையில் இன்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் தொடங்கியது. பூஜை நடத்தி பணிகளை தொடங்கினார்கள் சங்க நிர்வாகிகள். இந்த பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

“தலைமை மருத்துவரிடம் பேசினோம்” - விஜயகாந்த் உடல் நலம் குறித்து நாசர்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

nassar about vijayakath health condition

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

 

விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி உள்ளிட்ட பலரும் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். மேலும் உடல்நிலை குறித்து விஜயகாந்த்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது நாசர் பேசுகையில், “கேப்டன் நல்லாயிருக்கார். எல்லா புலன்களும் செயல்படுது. கொஞ்ச நாளாக வெளியான செய்திகளெல்லாம் மிகைப்படுத்தியதுதான். தலைமை மருத்துவரை பார்த்தோம். அவரும் நல்லாயிருப்பதாக சொன்னார். அதனால் மிகைப்படுத்தின செய்தியை யாரும் பரப்ப வேண்டாம். இரு மாதங்களுக்கு முன்னால் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கிறார். அதனால் கேப்டன் திரும்ப வருவார். எங்களுடன் பேசுவார். எங்களுடன் தோன்றுவார்” என்றார்.