
தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி வெளியானப் படம் ‘ஹிட் - 3’. இப்படத்தில் கே.ஜி.எஃப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்க கார்த்தி கேமியோ ரோலில் நடித்திருந்தார். இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை சைலேஷ் கொலனு இயக்கியிருக்க நானியே தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் இப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது. சோனியா விமல் என்பவர் ஹிட் 3 படத்தின் கதை தான் எழுதிய ‘ஏஜெண்ட் 11 அண்ட் ஏஜெண்ட் 5’ கதையை போலவே இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘நான் எழுதிய அந்த கதை இன்னும் வெளியாகவில்லை. இக்கதையை நான் எழுதி முடித்த பிறகு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி பதிவு செய்து விட்டேன். பின்பு கதையின் சுருக்கத்தை மட்டும் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நானியிடம் சொன்னேன். அவரிடம் இருந்து நல்ல பதில் வரும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து ஹிட் 3 படத்தை பார்த்த பிறகு என்னுடைய அனுமதி இல்லாமல் நான் எழுதிய கதையில் சிறு மாற்றம் செய்துவிட்டு அப்படியே எடுத்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து எழுத்தாளர் சங்கத்திலும் புகார் அளித்தேன். பதில் வரவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது கதைக்கும் படத்துக்கும் தொடர்புடைய ஒற்றுமைகளை பட்டியலிட்டு அதை நீதிபதி முன்பு சமர்பித்தார். மேலும் படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவீதத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு குறித்து பதிலளிக்க வேண்டும் என படக்குழுவினருக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.