Skip to main content

"சட்ட விதிகளுக்கு எதிராக செய்துள்ளீர்கள்" - பாக்யராஜுக்கு விஷால் நோட்டீஸ்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

nadigar sangam general secretary vishal notice to Bhagyaraj

 

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும் கே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இத்தேர்தலின் முடிவுகள் சில வழக்கு காரணத்தால் இரண்டரை ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதில் நாசர் தலைமையிலான அணி வெற்றிபெற்று தற்போது பதவி ஏற்றுக்கொண்டு வழி நடத்திவருகின்றனர்.. 


இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பாக்யராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், "தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பெயரில் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலை செய்துள்ளீர்கள். மேலும் சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதியுள்ளார்கள்.

 

இதுகுறித்து செயற்குழுவில் முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியிலிருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்திற்கு 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும், விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே பாக்யராஜ் நேற்று ஓ.பி.எஸ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்