Skip to main content

எஸ்.ஏ.சி, சமுத்திரகனி இணையும் புதிய படம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

bgfshsdf

 

‘நீதிக்கு தண்டனை’, ‘சாட்சி’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், மீண்டும் புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’. இதில் சமுத்திரகனி சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வாகை சூட வா’, ‘மௌனகுரு’ படத்தில் நடித்த இனியா நடிக்க, ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். ஓய்வுபெற்ற வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரும், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரியாக மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அபி சரவணனும், அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ப்ரியங்காவும் நடிக்கின்றனர்.

 

சமுத்திரகனியின் தாயாக மதுரையைச் சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரகனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள். மேலும் நகைக்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்துக்கொண்டிருக்கும் நிலையில் ‘நான் கடவுள் இல்லை’ படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறும்போது...

 

“குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரகனி பார்த்தார். பார்த்துவிட்டு குறும்படத்தைப் பற்றி நெகிழ்ந்து பேசி பாராட்டினார். இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்படமாக இயக்கும் எண்ணத்தை என்னுள் வித்திட்டார். சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாகச் சொன்னேன், கதையை கேட்டவர் ‘சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டும்’ என்று கேட்டதோடு நில்லாமல், தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்தப் படத்தில் நடித்துக்கொடுத்தார். இத்திரைப்படம் சமுத்திரகனி அவர்களுக்கு வித்தியாசமான படமாக அமையும். அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும் சமூக அக்கறையும் பாராட்டப்பட வேண்டியது அவசியம்” என்றார். 

 

சார்ந்த செய்திகள்