Skip to main content

போலீசாக நடித்து முதியவர்களிடம் நகை திருடிய பிரபல நடிகர் கைது!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

actor

 

போலீசாக நடித்து முதியவர்களிடம் நகை திருடிய ஃபிரோஸ் ஜாஃப்ரி என்ற மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சவ்தான் இந்தியா, சித்தோட் கி ராணி ராஜ்குமாரி பத்மினி, சத்ரபதி ராஜா சிவாஜி ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர், ஃபிரோஸ் ஜாஃப்ரி. இவர், முதியவர்களை ஏமாற்றி நகை திருடிய வழக்கிற்காக மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரிடம், 5 லட்சம் மதிப்பிலான நகையைத் திருடிய வழக்கில், இக்கைது நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மேலும், இவரிடம் மேற்கொண்ட விசாரணையில், போலீஸ் அதிகாரி போன்ற உடையணிந்து கொண்டு, சாலையில் நகையணிந்து வரும் முதியவர்களை அழைத்து, திருட்டு குறித்து அவர்களை எச்சரித்து, அவர்களது நகையைப் பையில் வைத்துக் கொடுப்பது போலக் கொடுத்து நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நாக்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் எனப் பல்வேறு மாநிலங்களில் இவரது தலைமையிலான கும்பல் கைவரிசையைக் காட்டியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, இக்கும்பலைச் சேர்ந்த மற்ற இருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்