Skip to main content

"என்னமா இப்படி ஆகிட்ட..." - திருமணத்தில் கண்கலங்கிய ரஜினி தேவர் குடும்பத்திற்கு செய்த உதவி!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தேவரின் மாப்பிள்ளை குடும்பத்திற்கு ரஜினி செய்த உதவி குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் சென்னையில் நடைபெற்றது. நண்பர்கள், கலையுலகைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள், பெரிய பொறுப்பிலுள்ள காவல்துறை அதிகாரிகள் எனப் பலருக்கும் ரஜினி பத்திரிகை கொடுத்தார். சிலருக்கு நடிகர் ரஜினிகாந்தே நேரடியாகச் சென்று கொடுத்தார். மற்றவர்களுக்கு ஆட்கள் மூலம் கொடுத்தனுப்பினார். எனக்கும் பத்திரிக்கை வந்து சேர்ந்தது. சாண்டோ சின்னப்பத்தேவரின் மாப்பிள்ளை இயக்குநர் தியாகராஜனுக்கு பத்திரிகை வரவில்லை.  நமக்கு ஏன் பத்திரிகை வரவில்லை என்று தியாகராஜனுக்கு ஒரே குழப்பம். ரஜினி வீட்டு திருமணம் என்பதால் திரையுலகமே பரபரப்பாக இருந்தது.

 

தனக்குப் பத்திரிகை வரவில்லை என்ற விஷயத்தை தியாகராஜன் என்னிடம் வந்து கூறினார். அந்த சமயத்தில்தான் தியாகராஜன் வீடு மாறியிருந்தார். அதன் காரணமாக பத்திரிகை வரமால் இருந்திருக்கும் என்று நான் அவரிடம் கூறினேன். பத்திரிகை வரவில்லை என்பதற்காக அவரால் திருமணத்திற்கு செல்லாமலும் இருக்க முடியாது. நாளைக்கே ரஜினி இவரை எங்காவது பார்த்தால், ‘ஏன் திருமணத்திற்கு வரவில்லை. பத்திரிகை கைக்குக் கிடைக்கவில்லை என்றால் வரமாட்டீர்களா... இது உங்க வீடு மாதிரிதானே’ எனக் கேட்பார். தேவர் குடும்பத்தோடு அந்த அளவிற்கு நெருக்கமான உறவு வைத்திருந்தார் ரஜினி. 

 

நான் என் காரில் குடும்பத்துடன் வருகிறேன். நீங்கள் ஒரு காரில் குடும்பத்துடன் வாருங்கள். இருவரும் ஒன்றாகச் செல்வோம். ஆனால், நாம் இருவரும் ஒன்றாக வந்ததுபோல அங்கு காட்டிக்கொள்ளவே கூடாது என்று அவருக்கு யோசனை கூறினேன். அவரும் சரி என்றார். அதேபோல திருமணத்தன்று இருவரும் ஒன்றாகச் சென்று, தனித்தனியாக வந்ததுபோல காட்டிக்கொண்டோம். எள்ளு போட்டால்கூட கீழே விழாத அளவிற்கு திருமண மண்டபத்தில் கடுமையான கூட்ட நெரிசல். ஒருவழியாக மேடையேறி ரஜினிக்கு பின்புறமாக தேவரின் மாப்பிள்ளையும் அவருடைய மனைவியும் நின்றனர். வந்திருந்தவர்களை வரவேற்றுக்கொண்டிருந்த ரஜினி, யதார்த்தமாக பின்புறம் திரும்புகையில் அவர்களைப் பார்த்துவிடுகிறார். தேவர் மகள் கைகூப்பி ‘வணக்கம் அண்ணா...’ என்றார். அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியின் எல்லைக்குச் சென்றுவிட்டார் ரஜினி. தேவரின் மகள் முன்பு இருந்ததைவிட மிகவும் மெலிந்திருந்தார். அந்த சமயத்தில் அவர்கள் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. ‘என்னமா இப்படி ஆகிட்ட...’ என்று தேவர் மகளின் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு கேட்கையிலேயே ரஜினிக்கு கண்கள் கலங்கிவிட்டன. அதைப் பார்த்து எனக்கு கண்கள் கலங்கிவிட்டன. பின், தேவரின் மாப்பிள்ளையை, ‘நாளைக்கு ஆஃபிசில் வந்து பாருங்கள்’ என்றார் ரஜினி. மணமக்களை வாழ்த்திவிட்டு நாங்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம்.

 

ரஜினி கூறியதுபோல தேவரின் மாப்பிள்ளை மறுநாள் சென்று ரஜினியை சந்தித்தார். அவர்களின் தற்போதைய நிலைமையை அறிந்து அவருக்கு சிறிய தொகையை ரஜினி கொடுத்து உதவினார். பொதுவாக ரஜினி யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் பிடி கொடுக்கமாட்டார். நாம் ஏதாவது கூறினால், 'அப்படியா... சரி பார்க்கலாம்...' என்றுதான் கூறுவார். ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர் ரஜினிகாந்த்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.