
மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் ‘எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரித்திருக்க முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படத்தில் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்புக்கு மத்தியில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 27ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
இந்தப் படத்தின் மொழியாக்க வடிவமைப்பாளராக டப்பிங் இயக்குநராகப் பணியாற்றி இருப்பவர் ஆர்.பி. பாலா. அவர் ' எம்புரான்' படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றிப் பேசும்போது, “நான் இன்று நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் இங்கே உங்கள் முன் பேசுவதற்கும் காரணமாக இருப்பவர் மோகன்லால் சார் தான். அவரது 'புலி முருகன்' படத்தில் தான் நான் முதலில் தமிழில் மொழியாக்கம் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றினேன். அந்தப் படம் மலையாளத்தில் பிரமாதமான வெற்றி பெற்றது. தமிழிலும் பேசப்பட்டது. எனது வாழ்க்கையை புலி முருகனுக்கு முன், புலி முருகனுக்குப் பின் என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு எனது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது அந்தப் படம் .
மோகன்லால் சார் நடிப்பில் இப்போது வந்துள்ள 'எம்புரான்' படத்தை பிரித்திவிராஜ் சார் இயக்கி உள்ளார். அவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே உருவான ' லூசிஃபர்' படத்திலும் நான் பணியாற்றினேன். அந்தப் படத்தில் பணியாற்றிய போது எனது தமிழ் மொழியாக்க, டப்பிங் பணிகள் பற்றிக் கருத்து கேட்பதற்காகச் சில காட்சிகளைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். பணிகளில் பரபரப்பாக அவர் பிஸியாக இருந்ததால் முதலில் தயங்கினார். சில நிமிடங்கள் மட்டும் பார்ப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ பாதி படத்தையே பார்த்துவிட்டார். அவருக்குப் பிடித்து நிறைவாக இருந்தது, பாராட்டினார், லூசிஃபர் பெரிய வெற்றி பெற்றது. அவர் எனக்கு இந்த எம்புரான் படத்தில் வாய்ப்பு அளித்துள்ளார்.அவருக்கு என் நன்றி” என்றார்.