Skip to main content

”இதற்குப் பின்னால் எவ்வளவு வலி உள்ளது என்பதை அனைவரும் உணர்வார்கள்” - அருண் விஜய் பேச்சு

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

Arun Vijay

 

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. இந்த சீரிஸை ஏ.வி.எம் ப்ரோடக்‌ஷன்ஸ் மற்றும் சோனி லைவ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த வெப்சீரிஸ் ஆகஸ்ட் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தமிழ்ராக்கர்ஸ் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகர் அருண் விஜய் பேசுகையில், “இயக்குநர் அறிவழகனுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளேன். என்னை எப்படி காட்டினால் சிறப்பாக இருக்கும் என்று அவருக்குத் தெரியும். அதனால் அவர் இயக்குகிறார் என்றால் என்னை அப்படியே ஒப்படைத்துவிடுவேன். மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட ஏ.வி.எம் நிறுவனத்துடன் இணைந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. வெப்சீரிஸ் பண்ணுவதற்கும் படம் பண்ணுவதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. இந்தக் கதையை இரண்டு மணி நேரத்திற்குள் சொல்ல முடியாது. படத்தில் ஒரு நடிகராக எனக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால், வெப்சீரிஸில் சுதந்திரமாக எல்லாவற்றையும் பண்ண முடிந்தது. 

 

இந்த வெப்சீரிஸை பார்த்து பிறகு ஒரு படத்தை எடுப்பதற்குப் பின்னால் எவ்வளவு வலி இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள்.அந்த உணர்தலை இந்த சீரிஸ் நிச்சயம் ஏற்படுத்தும். ட்ரைலர் பார்த்த அனைவருமே ஒளிப்பதிவை பற்றித்தான் அதிகம் பேசுகிறார்கள். சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்த ராஜசேகர் சாருக்கு நன்றி. படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அடுத்து என்ன அடுத்து என்ன என்று யோசிக்க வைக்கக்கூடிய சீரிஸாக இது இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்