Skip to main content

“படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள்” - அனுபவம் பகிர்ந்த அருண் விஜய்

Published on 06/01/2024 | Edited on 06/01/2024
arun vijay speech in mission trailer launch event

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மிஷன் சாப்டர்1’. பொங்கல் திருநாள் விடுமுறையை ஒட்டி இந்தப் படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் அருண் விஜய் பேசியதாவது, "பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்னுடைய முதல் படம் 'மிஷன் சாப்டர்1' என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். நாம் என்னதான் உழைப்பை கொடுத்திருந்தாலும் படம் சரியான தேதியில் வெளியாவது என்பது முக்கியமான விஷயம். அதை செய்து கொடுத்த லைகாவுக்கு நன்றி. நான் இதுவரை நடித்த படங்களிலேயே 'மிஷன் சாப்டர்1' தான் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம். இந்த ஸ்கிரிப்ட் கொடுத்த விஜய்க்கு நன்றி. ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாமே இதில் சரியாக வந்திருக்கிறது. சிறந்த திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.  

எமி ஜாக்சன், நிமிஷா எனப் பலரும் இதில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசை இந்தப் படத்திற்குப் பெரிய பலம். லண்டன், சென்னை ஆகிய இடங்களில் இதை படமாக்கினோம். நாலரை ஏக்கரில் மிகப்பெரிய ஜெயில் செட்டை இங்கு உருவாக்கினோம். சில காரணங்களால் அது சேதமானது. அப்போது கூட செலவைப் பற்றி பொருட்படுத்தாது லைகா புரொடக்‌ஷனஸ் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். தொழில்நுட்பக் குழுவும் படத்திற்குப் பெரிய பலம். படப்பிடிப்புத் தளத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் அதற்கான நேரமே தராமல் திட்டமிட்டபடி சரியாக வேலை செய்து முடித்தார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் 1500 பேர் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எல்லாம் விஜய் அழகாக மேனேஜ் செய்திருக்கிறார். என்னை வேறொரு கோணத்தில் இந்தப் படம் காட்டும். ஆக்‌ஷன், எமோஷன் என அனைத்து விஷயங்களிலும் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம். இப்படியான கதையைக் கொடுத்த மகாதேவன் சாருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. பொங்கல் அன்று உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். எங்களுடன் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்" என்றார். 

இயக்குநர் விஜய் பேசியதாவது, "நிறைய படங்கள் இயக்கி இருக்கிறேன். ஆனால், இது புது அனுபவமாக இருந்தது. படத்தின் தயாரிப்பாளர்கள் சுவாதி, ராஜசேகர் சாருக்கு நன்றி. எங்களைப் போலவே இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்த லைகா புரொடக்‌ஷன்ஸூக்கும் நன்றி. தமிழ்க்குமரன் சார் இந்தப் படத்தைப் பார்த்ததும் உடனே இணைத் தயாரிப்பு செய்கிறேன் என்று சொன்னார். அதன்பிறகு தான் இந்தப் படம் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றது. 'கேப்டன் மில்லர்', 'அயலான்' என இரண்டு அசுரத்தனமான படங்கள் வருகிறது. இந்த வரிசையில் நாங்களும் வருகிறோம். பல சிரமங்களைத் தாண்டித்தான் இந்தப் படத்தை வெளியிடுகிறோம். அருண் எங்களுக்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தார். சினிமாவில் உள்ள திறமையான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் நிமிஷாவும் இருப்பார். எமி, இயல் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இயல் கதாபாத்திரம்தான் படத்தின் ஆன்மா. தொழில்நுட்பக் குழுவினரும் சிறப்பாக செய்துள்ளனர். இப்போது சினிமா தியேட்டருக்கான படங்கள், டிஜிட்டல் சினிமா எனப் பிரிந்துள்ளது. நிச்சயம் 'மிஷன் சாப்டர்1' உங்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும். எல்லாப் படங்களுமே சேர்ந்து ஜெயிக்க வேண்டும்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் அருண் விஜய் கூட்டணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
arun vijay next movie update

அருண் விஜய் கடைசியாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அருண் விஜய்யின் 36ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க பாபி பாலசந்தர் வழங்குகிறார். 

இப்பட பூஜையில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப் பணிகளை தொடங்கி வைத்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படப் பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

Next Story

ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்; தொடர்ந்து நடக்கும் மாற்றம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
maniratnam kamal in thug life arun vijay replaced jayam ravi character

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடைக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை முடித்துவிட்டு அ. வினோத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க கமிட்டானார். ஆனால் அது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த சூழலில் மணிரத்னத்துடன் அவர் கைகோர்த்துள்ள ‘தக் லைஃப்’ பட பூஜை கடந்த அக்டோபர் மாதம் போடப்பட்டது. ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமல்ஹாசனும், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து வழங்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, விருமாண்டி புகழ் அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடத்த திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. மேலும் அங்கு பணிகள் நடந்ததாக கூறப்படும் நிலையில், கமல் வருகை தரவில்லையாம். அவர் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால் தேர்தல் முடிந்த பின்பு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தற்போது சென்னையில் இருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு அவருக்கு பதில் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக முணுமுணுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே மணிரத்னத்துடன் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.