Skip to main content

சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஹீரோயின்கள் மறுத்தபோது இவர்தான் நடித்தார்” - ஆரி பேச்சு

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

 Aari

 

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

நிகழ்வில் நடிகர் ஆரி பேசுகையில், “இந்தப் படத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சிம்புவும் படத்தில் நடித்திருக்கிறார். இருவருக்குமே ஒரு நல்ல பண்பு உள்ளது. கதாநாயகியை மையப்படுத்திய கதையில் பல நடிகர்கள் நடிக்க விரும்புவதில்லை. ஆனால், சிம்பு அதையெல்லாம் பற்றி யோசிக்காமல் மஹா படத்தில் நடித்துள்ளார். இதுபோல, ஹன்சிகாவும் நடித்துக்கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தார். அன்றைக்கு சிவகார்த்திகேயனுடன் நடிக்க மாட்டேன் என்று சில ஹீரோயின்கள் சொன்னார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஹன்சிகா நடித்தார். இன்றைக்கு சிவகார்த்திகேயன், உதயநிதி இருவருமே தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக உள்ளனர். மஹா படத்தில் நடித்துக்கொடுத்ததற்காக சிம்புவிற்கு வாழ்த்துகள். 

 

ஒரு சீனில் ஹன்சிகா நடித்து முடித்தவுடன் நிச்சயம் உங்களுக்கு அவார்டு கிடைக்கும் என்று சொன்னேன். அதற்கு அவர், எனக்கு அவார்டும் வேண்டும், ரிவார்டும் வேண்டும் என்றார். அதனால்தான் இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோயினாக உள்ளார். தமிழ் சினிமாவில் இன்னொறு ரவுண்டு வர இருக்கிறார் என்பதைவிட இனிதான் பெரிய ரவுண்டு வரவுள்ளார் என்று சொல்லலாம்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்