Skip to main content

சென்னை அணியுடன் மோதப் போவது யார்? - மும்பை VS குஜராத் முழு அலசல்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது எலிமினேட்டர் போட்டி இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

 

குஜராத் அணியை ஒருமுறை கூட வீழ்த்தாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல்முறையாக குவாலிஃபயர் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் லக்னோ அணியை ஒருமுறை கூட வீழ்த்தாத மும்பை அணி எலிமினேட்டர் சுற்றில் லக்னோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டிக்கு முன்னேற நடப்பு சாம்பியன் குஜராத் அணியும் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. ஆட்டத்தின் நுணுக்கங்களை கற்றுத் தந்த பாடசாலைக்கு எதிராக வியூகங்களை வகுத்துக் கொண்டுள்ளார் ஹர்திக் பாண்டியா. மும்பை அணியில் நெடுங்காலம் விளையாடிய ஹர்திக், குஜராத் அணியின் கேப்டனான பின் தொடர்ந்து இரண்டு முறை அணியை ப்ளே ஆஃப் போட்டிக்கு கொண்டு வந்து வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துள்ளார். 

 

ஆனால், எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியை வீழ்த்த ஹர்திக் படை என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளது என்பது போட்டியின் போதே தெரியும். மறுபுறம் மும்பை அணி ப்ளே ஆஃப் போட்டிகளில் ‘கங்கா சந்திரமுகியாக மாறுவதை போல்’ சிறந்த அணியாக செயல்படுவதை கடந்த சீசன்களில் நாம் பார்த்துள்ளோம். 19 ப்ளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி அதில் 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. அனைத்தையும் தாண்டி மும்பை அணி மட்டும் தான் குஜராத் அணியை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. 

 

மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி ப்ளே ஆஃப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ப்ளே ஆஃப் போட்டி சிறப்பானதாக அமைந்ததில்லை. ரோஹித் 19 முறை மும்பை அணிக்காக ப்ளேஆஃப் போட்டியில் விளையாடியுள்ளார். அதில் 297 ரன்களை மட்டுமே எடுத்து சராசரியாக 16.50 ரன்களை மட்டுமே வைத்துள்ளார். அதில் இரு அரை சதங்களும் அடக்கம். அவர் விளையாடிய கடைசி 9 போட்டிகளில் 125 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

மற்றபடி இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேம்ரூன் க்ரீன், திலக் வர்மா, நெஹேல் வதேரா என அணியின் பேட்டிங் ஆர்டர் சிறப்பாகவே அமைந்துள்ளது. நடப்பு சீசனில் தொடக்க போட்டிகளில் திலக் வர்மா சிறப்பாக ஆடி சில ஆட்டங்களில் மும்பை அணி சிறந்த ஸ்கோரை எட்ட உதவினார். தொடரின் நடுவில் அந்த பணியை சூர்யகுமார் மேற்கொண்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கடந்த சில போட்டிகளில் கேமரூன் கிரீன் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார். போட்டிக்கு ஏற்றார்போல் மேட்ச் வின்னர்களாக செயல்பட்டு மும்பை பேட்ஸ்மேன்கள் அணிக்கு தூணாக விளங்குகின்றனர்.

 

மறுபுறம் பும்ரா, ஆர்ச்சர் இல்லாமல் தொடக்க போட்டிகளில் மும்பை அணி விக்கெட்களை எடுக்கத் திணறி வந்தது. ஆனால் தொடரின் பிற்பாதியில் ஆகாஷ் மேத்வாலின் எழுச்சி பிற பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தினால் எதிரணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்களை வேகமாக இழந்தனர். ஆகாஷ் மேத்வாலின் எகானமி ரேட் பவர் ப்ளேவில் 7.25 ஆகவும் டெத் ஓவர்களில் 7.26 ஆகவும் உள்ளது. இதன் காரணமாக அணியின் மற்ற பந்துவீச்சாளர்களான பெஹ்ரெண்ட்ராஃப் மற்றும் ஜோர்டன் அழுத்தமில்லாமல் பந்துவீச முடிகிறது. சுழலில் குமார் கார்த்திகேயா மற்றும் பியூஷ் சாவ்லா தங்களது பணியை சிறப்பாக செய்வதால் பந்து வீச்சிலும் மும்பை அணி பலமானதாகவே உள்ளது.

 

குஜராத் டைட்டன்ஸ்

லீக் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய குஜராத் அணி முதல்முறையாக வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடுகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி இன்றைய போட்டியை எப்படி சமாளிக்கும் என்பதைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் கில் கட்டாயமாக மும்பை பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருப்பார்.  

 

Who will clash with the Chennai team? Mumbai VS Gujarat Full Analysis

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷனகா தொடர்ந்து சொதப்பி வருவது குஜராத் அணிக்கும் பெரும் பின்னடைவு. அவருக்கு பதில் ஒடியன் ஸ்மித், அல்சாரி ஜோசப் போன்றோர் விளையாட வைக்கப்படலாம். மற்றபடி விஜய் சங்கர், சஹா, மில்லர் போன்றோர் சிறப்பான ஆட்டத்திறனைக் கொண்டுள்ளனர். டேவிட் மில்லர் மும்பை அணிக்கு எதிராக ஒரு முறை மட்டுமே அரைசதம் அடித்திருந்தாலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 140 ஆக உள்ளது. சராசரியாக 40 ரன்களில் அவர் ஆடி வருகிறார். 

 

நடப்பு சீசனில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா சராசரியாக 40 ரன்களை வைத்துள்ளார். ஆனால் 4 ஆவது இடத்தில் களமிறங்கும் போது சராசரியாக 11.4 ரன்களை மட்டுமே சராசரியாக வைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 3 ஆவது இடத்தில் களமிறங்கினால் அணிக்கு கூடுதல் பலம். பந்துவீச்சில் நடப்பு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரு பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியில் உள்ளனர். ரஷித் கான் மற்றும் ஷமி இருவரும் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஆட்டத்தின் போக்கு குஜராத் அணிக்கு சாதமாக மாறலாம். ஏனெனில் இஷான் கிஷன் தொடர்ந்து வேகப்பந்து வீச்சுக்கு எதிராக திணறி வருகிறார். அதே சமயத்தில் 54 பந்துகளை இஷான் கிஷனுக்கு எதிராக வீசியுள்ள ஷமி ஒருமுறை கூட அவரை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சென்னை அணியுடனான போட்டியில் யஷ் தயாலுக்கு பதிலாக நல்கண்டே சேர்க்கப்பட்டார். அழுத்தமான சூழலில் நல்கண்டே தடுமாறியதைக் காண முடிந்தது. இன்றைய போட்டியில் அவருக்கு பதில் யஷ் தயால் சேர்க்கப்படலாம்.

 

இரு அணியின் ஒப்பீடு

ரஷித் கான் 6 இன்னிங்ஸ்களில் 4 முறை ரோஹித் சர்மாவை வீழ்த்தியுள்ளார். ஆனால் ரஷித் கான் பந்துவீச்சில் இதுவரை ஆட்டமிழக்காத சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 67 ரன்களை அடித்துள்ளார். இரு அணிகளும் இலக்கை சேஸ் செய்வதில் முதன்மையான அணியாக திகழ்கிறது. இரு அணிகளும் இதுவரை 9 முறை இலக்கை சேஸ் செய்துள்ளன, அதில் 6 முறை இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளது.  மும்பை அணி தனது பவர்ப்ளே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி வந்துள்ளது. அந்த அணியின் பவர் ப்ளே எகானமி 9.2 ஆக இருந்தது. அதன் சராசரி ரன்கள் 54.9. ஆனால் கடைசி 5 போட்டிகளில் 8.2 எகானமி ரேட்டுடன் 27.3 ரன்களை சராசரியாக வைத்துள்ளது.  


 

Next Story

“ரோஹித்துக்கு பிறகு இந்திய அணிக்கு கேப்டனாக இவரே தகுதியானவர்” - ஹர்பஜன் சிங் கருத்து

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

ஐபிஎல் 2024 இன் 38 வது லீக் ஆட்டம் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று (22-04-24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்த அணியில் புதிதாக துஷாரா, நெகல் வதீரா சேர்க்கப்பட்டனர்.

மும்பை அணிக்கு தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் இஷான் களமிறங்கினர். ரோஹித் 6 ரன்களிலும், இஷான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். பின்னர், வந்த முகமது நபி 23 ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுக்க, அதன் பிறகு திலக் வர்மாவும், நெகல் வதீராவும் பார்ட்னர்ஷிப் அமைத்து 99 ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக வந்து வீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர், 180 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தது. பட்லரும், ஜெயிஸ்வாலும் இணைந்து அதிரடியாக ஆடத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர், வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் உடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடத் தொடங்கினார். மும்பை அணியின் பந்துவீச்சை பதம் பார்த்த அவர், 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அவருக்கு துணை நின்ற கேப்டன் சஞ்சு சாம்சங், 38 ரன்கள் எடுத்தார். 18. 4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்த ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஜெய்ஸ்வாலுக்கு இது ஐ.பி.எல்.லில் இரண்டாவது சதம் ஆகும். இந்த இரண்டு சதங்களும் மும்பை அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 14 புள்ளிகள் பெற்று தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதற்கிடையில், இந்திய உலகக் கோப்பை டி 20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 அணிக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த உலகக் கோப்பை டி20க்குப் பிறகு ரோஹித் டி20 விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், இந்திய அணியின் டி20 அணிக்கு யார் கேப்டனாக வருவார் என்ற பேச்சு எழுந்தும் வருகிறது. இடையில் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக சில போட்டிகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், தற்போது கேப்டனாக அவரின் செயல்பாடுகள் மற்றும் வீரராக அவரின் செயல்பாடுகள் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், காயத்தால் அடிக்கடி அவதிப்படுகிறார் என்பதாலும் இந்திய அணிக்கு வேறு கேப்டனை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ யோசிப்பதாக கூறப்படுகிறது.

Harbhajan Singh says After Rohit, he is the most deserving captain of the Indian team

இந்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு அடுத்து யாரை டி20 கேப்டனாக நியமிக்கலாம் என்று ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே பார்ம் என்பது தற்காலிகம் தான். அவரின் திறமை தான் நிரந்தரம். மேலும், இந்திய டி20 அணிக்கு சஞ்சு சாம்சனை நிச்சயம் எடுக்க வேண்டும். மேலும் இந்திய அணிக்கு ரோஹித்துக்குப் பிறகு டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை வளர்த்தெடுக்க வேண்டும்” என்றார். இது சரிதான் என்கிற வகையில் ரசிகர்களும் அவருடைய பதிவில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.