Skip to main content

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி - சாம் கரன் நீக்கம்!

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

sam curran

 

இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர்  சாம் கரன். உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடப்பெற்றிருந்த இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்தார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு சாம் கரன், தனக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் சாம் கரனுக்கு முதுகின் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சாம் கரன் விரைவில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் சாம் கரன் சில நாட்களில் இங்கிலாந்து திரும்புவார் என்றும், இந்த வார இறுதியில் சாம் கரனுக்கு மேலும் சோதனைகள் செய்யப்படும் என்றும், தங்களது மருத்துவ குழு சாம் கரனின் காயம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

இதனையடுத்து இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் இருந்து சாம் கரன் நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கருதப்படுகிறது. சாம் கரன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து நீக்கப்படுவது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சாம் கரனுக்கு பதிலாக அவரது சகோதரர் டாம் கரனை இங்கிலாந்து அணியில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
New captain appointed for Chennai Super Kings team

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி நாளை (22.03.2024) முதல் ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி 2 ஆம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

New captain appointed for Chennai Super Kings team

இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக இதுவரை 5 சாம்பியன் கோப்பைகளை பெற்று கொடுத்த தோனி தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்துள்ளார். ஐபிஎல் - 2024 கோப்பையுடன் அனைத்து அணிகளின் கேப்டன்களும் நிற்கும் புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. 

Next Story

ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
IPL Release of schedule for matches

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.எல். தொடரின் முதல் 17 நாட்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை   21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 9 வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.