Skip to main content

இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற பாகிஸ்தான்; அரையிறுதியில் நியூசிலாந்தினை வீழ்த்தி அசத்தல்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Pakistan qualified for the final. Amazing to beat New Zealand in the semi-final

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றுள்ளன. 

 

இதில் பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஃபின் ஆலன் 4 ரன்களில் வெளியேற கான்வே 21 ரன்கள் அடித்து ரன் அவுட் ஆனார். அதன் பிறகு வந்த ஃபிலிப்ஸ் 6 ரன்களில் வெளியேற வில்லியம்சன் மற்றும் மிட்சல் ஆகியோர் பொறுமையாக ரன்களை சேர்த்தனர். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 152 ரன்களை எடுத்தது. 

 

153 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முகம்மது ரிஸ்வான் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பாகிஸ்தான் அணி முதல் விக்கெட்டிற்கு 105 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய பாபர் ஆசம் 53 ரன்களில் வெளியேறினார். இதன் பின் முகம்மது ஹாரிஸ் உடன் கைகோர்த்த ரிஸ்வான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தைக் கடந்தார். 57 ரன்களில் ரிஸ்வான் வெளியேற பாகிஸ்தான் அணிக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. 

 

இறுதியில் ஒரு ஓவருக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட 19.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. நாளை நடக்கும் இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 13 ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும். 

 

 

Next Story

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வி; இந்தியக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

 World Cup Pakistan Defeat; Conflict among Indian college students

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது. 

 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பிற மாநில மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள லாலா லஜபதிராய் மெமோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்துடன் தோற்ற நிலையில் இந்தத் தோல்வியை சில மாணவர்கள் கொண்டாடியதால் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

 

இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பீகார் மற்றும் பிற மாநில மாணவர்கள் மதரீதியாகக் கோஷம் எழுப்பியதால் சண்டை வந்ததாக காஷ்மீர் மாணவர்கள் கூறினர். ஆனால் காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர், இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன் அவர்களது அறைக்குச் சென்று எச்சரித்தார். வார்டனை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் அவரை மீட்கச் சென்றோம். அவர்கள் எங்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடிகளை வீசினர் என பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூறினர். 

 

இதனால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

 

 

Next Story

பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல்; டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

England win T20 World Cup; Amazing to beat Pakistan

 

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர் 12 சுற்றுகள் முடிந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. முதல் பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாம் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் தகுதி பெற்றன. 

 

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆடிய முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

இந்நிலையில் இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

 

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் மற்றும் மசூத் மட்டும் பொறுமையாக ஆடி ரன்களை எடுக்க மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது.

 

138 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் இந்தியா உடனான போட்டியில் அதிரடி காட்டிய அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின் வந்த பிலிப் 10 ரன்களில் வெளியேறினார். ஜாஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். 19 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது.