இந்திய கேப்டன் கோலி சிறப்பாக செயல்படுவதற்கான முக்கிய காரணம் அணியில் தோனி மற்றும் ரோஹித் சர்மா இருப்பதுதான் காரணம் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசிய கம்பீர், "கோலி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். ஆனாலும் ஒரு கேப்டனாக அவர் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. கேப்டனாக அவரது சிறப்பான செயல்பாட்டிற்கு தோனி, ரோஹித் ஆகியோர் முக்கிய காரணமாக உள்ளனர். உங்களுக்கு ஒத்துழைக்காத வீரர்கள் அணியில் இருக்கும்போதுதான் உங்கள் தலைமைப் பண்பு கவனிக்கப்படும்.
ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக என்ன சாதித்திருக்கிறார் என்பதையும், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்ன சாதித்து இருக்கிறார் என்பதையும், ஆர்சிபி அணிக்காக கோலி என்ன சாதித்தார் என்பதையும் ஒப்பிட்டு பாருங்கள்" என கூறினார். அவரின் இந்த பேச்சு கோலியை சீண்டும் வகையில் அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.