
16 ஆவது ஐபிஎல் சீசனின் 29 ஆவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்தனர். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வென்றது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 3 ஆம் இடத்திலேயே நீடிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இந்தப் போட்டி முடிந்த பின்பு பேசிய தோனி, “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம். சென்னையில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ரசிகர்கள் எனக்கு அதிகமான அன்பை கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் கூட பாருங்கள் நான் பேசுவதை கேட்க நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்” என்றார்.