Skip to main content

எருமையாகக் காட்சி தந்த ஈசன்; கேதார்நாத் ஆலயம்!

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

Eason looks like a buffalo; Kedarnath Temple!

 

காளை வாகனன் என்று போற்றப்படும் சிவபெருமான் எருமையாக மாறி பஞ்ச பாண்டவர்களுக்குத் தரிசனம் தந்தார் என்று புராணம் கூறுகிறது. அவ்வாறு காட்சி தந்த திருத்தலம் கேதார்நாத். இத்தலம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரத்து 755 அடி உயரத்தில் இமயமலைப் பகுதியில் உள்ளது.

 

மகாபாரதப் போரில் வெற்றிபெற்ற பாண்டவர்கள் சிவபெருமானை தரிசிப்பதற்காக இமயமலைக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள். கேதார்நாத் பகுதிக்கு அவர்கள் வந்தபோது, சிவபெருமான் காட்சியளித்து உடனே மறைந்துவிட்டார். அவரை மீண்டும் தரிசிப்பதற்காக, பாண்டவர்கள் அங்குள்ள ஒரு குகையில் தியானம் செய்தார்கள். அவர்களுக்கு சிவபெருமான் காட்டெருமை வடிவிலும், ஜோதிர்லிங்கமாகவும் காட்சியளித்தார். அந்த இடம் கேதார்நாத் என்கிறது புராணம்.

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் ஐந்து கேதார்நாத் உள்ள தாக பத்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் இந்த கேதார்நாத் தலத்தில் சிவபெருமான் எருமைக்கடா உருவில் காட்சியளித்து மறைந்தார். இங்கே அவரது பிருஷ்டபாகம் காணப்படுகிறது. மத்திய மகேசுரம் என்னுமிடத்தில் சிவனுடைய நாபிக்கமலம், அதாவது மத்திய பாகம் காணப்படுகிறது.

 

துங்கநாத் என்னுமிடத்தில் சிவபெருமானுடைய ஹஸ்தங்கள் இருக்கின்றன. ருத்ரநாத் என்னுமிடத்தில் சிவபெருமானுடைய முகம் காணப்படுகிறது. கல்பேசுவரநாத் என்னுமிடத்தில் சிவபெருமானின் ஜடாபாரம் தரிசனம் தருகிறது.

 

மேற்கண்ட ஐந்து இடங்களும் புனிதமாகக் கருதப்படுவதால், கேதார்நாத் தலத்திற்கு வருபவர்கள் இங்குள்ள கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். மேலும் அருகில் பாய்ந்தோடும் மந்தாகினி நதியில் நீராடுவார்கள். காசியில் ஓடும் கங்கைக்குச் சமமாகக் கருதப்படுகிறது இந்த நதி. ‘கேதாரம்’ என்ற சொல்லுக்கு, தேவலோகத்திலிருந்து வேகமாக இறங்கிய கங்கா தேவியை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கி பூலோகத்திற்கு இறக்கியத் திருத்தலம் என்று பொருளாகும்.

 

திருத்தலங்களில் சிறந்தது கேதாரம் என்று ஈசன் பார்வதி தேவிக்குக் கூறினார் என்கிறது புராணம். கேதார்நாத் தலத்தில் அமைந்துள்ள கோவிலில் இறைவன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மேலும், இக்கோவிலில் கேதாரகௌரி, விநாயகர், கார்த்திகேயன், நந்தி, விஷ்ணு ஆகியோருக்கும் பாண்டவர்கள், திரௌபதி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. இங்கு எழுந்தருளியுள்ள விஷ்ணுவை தரிசித்தால் பத்ரி நாராயணம் சென்ற பலனுண்டு. இந்த ஆலயத்தின் பின்புறம் செல்லும் காட்டு வழியே சென்றால் பத்ரிநாதம் திருத்தலம் சுமார் 33 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு மேலே சென்றால் இயற்கையன்னையின் கோவிலை தரிசிக்கலாம். அங்கே சிவபெருமான் எருமை மேல் அமர்ந்து அருள் புரிகிறார்.இவரைத் தொட்டுத் தழுவி வழிபடலாம். இதனால் எம பயம் இல்லை.

 

கேதார்நாத் தலத்திலுள்ள கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பல குகைகள் உள்ளன. அந்தக் குகைக்குள் தியானம் செய்வதற்கான அறை போன்ற அமைப்பிலும், அதற்குள்ளேயே தங்கி ஓய்வெடுக்க ஓர் அறை போன்றும் இடவசதி உள்ளது என்கிறார்கள். வசதி படைத்தவர்கள் அங்கே குகைக்குள் தங்கி தியானம் மேற்கொள்கிறார்கள். அவர்களின் வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும் வெற்றிபெறுவதாகச் சொல்லப்படுகிறது.

 

கேதார்நாத் திருத்தலத்தில் அமைந்துள்ள ஆலயம் பனிப்பாறைகள் சூழ்ந்த இடமென்பதால், ஏப்ரல் மாதத்திலிருந்து தீபாவளி வரை ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் யாத்திரை வருவது வழக்கம்.

 

இதேபோல் ஒரு குறிப்பிட்ட காலம்வரை திறந்திருக்கும் கோவில்களும் இமயமலைப் பகுதியில் உள்ளன. அதில் அமர்நாத் திருத்தலம் மிகவும் புகழ்பெற்றது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகையில் இயற்கையாகவே உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். பக்தர்கள் தங்கள் உடல்நலத்தை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொண்டு, இந்தப் புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அமர்நாத் யாத்திரை செல்ல அரசு அனுமதிக்கிறது. இந்த (2019) ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரை அமர்நாத் குகைக்குள் எழுந்தருளும் பனி லிங்கத்தை தரிசிக்க உகந்த காலம். மற்ற மாதங்களில் யாத்திரிகர்கள் அங்கு செல்ல முடியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவும், பனிப்பாறைகளும் காட்சியளிக்கும்.

 

அமர்நாத் குகை 150 அடி அகலம், 150 அடி நீளம், 150 அடி உயரம் கொண்டது. மேற்கூரையிலிருந்து தண்ணீர் குகையின் பின்புறமுள்ள பாறையின் நடுவில் கொட்டித் தோய்ந்து பனிக்கட்டியாக மாறி பெரிய சிவலிங்க ரூபத்தில் காட்சியளிக்கும். இந்தக் குகைக்குள் தவம் செய்யவோ, தியானம் செய்யவோ அனுமதியில்லை.

 

உறைபனியான சிவலிங்கத் தோற்றத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அது ஒவ்வொரு அமாவாசைக்கு மறுதினத்தன்றும் காட்சியளிக்கத் தொடங்கி, பௌர்ணமியன்று முழு வடிவத்துடன் காட்சியளிக்கும். மறுநாள் முதல் அதன் வடிவம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டு வந்து அமாவாசையன்று மறைந்துவிடும். இந்தப் பனிலிங்கம் எப்படி வளர்கிறது? எப்படி குறைகிறது என்பது விவரிக்க முடியாத பெரும் விந்தையாக இருக்கிறது. இந்தப் பனி லிங்கத்தின் நிறம் மிகப் பிரகாசமாகத் திகழும். மேலும், அந்தப் பனி லிங்கம் உள்ள குகைக்குள் ஒரு ஜோடிப் புறாக்கள் இருக்கின்றன. இந்தப் புறாக்களும் வழிபடப்படுகின்றன. இதனை தரிசித்தால்தான் புனிதம் கிட்டும் என்பது ஐதீகம்.

 

மேற்கண்ட அற்புதமான, குறிப்பிட்ட காலம் வரை தரிசிக்க இயலும் கேதார்நாத் மற்றும் அமர்நாத் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட வாழ்வில் புனிதம் சேரும். இறுதிக் காலத்தில் சொர்க்கலோகத்தில் ஓரிடம் கிடைக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

 

 

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.