
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
அமெரிக்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரையில் கரோனா பாதிப்பு அதிகமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக ஜெர்மனியில் அதன் பாதிப்புகள் அதிகமாக இருந்து வருகின்றது. கரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக நினைத்து ஊரடங்கை படிப்படியாக தளர்த்திய ஜெர்மனிக்கு தற்போது அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வருகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெர்மனி, தளர்த்தப்பட்ட ஊரடங்கை வரும் ஜூன் 9 தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.