Skip to main content

மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டதால் ஆத்திரம்; வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொன்ற நண்பர்கள்!

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

youth passed away police arrested two

 

ஓசூர் அருகே சூதாட்டத்தில் தன்னை வென்ற நண்பர்களிடம் மதுபானம் 'டிரீட்' கேட்டதால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள காரப்பள்ளியைச் சேர்ந்தவர் மோகன் (27). கூலித்தொழிலாளி. சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் உமேஷ் (24) மற்றும் மூர்த்தி (20). இவர்கள் மூவரும் நண்பர்கள். யுகாதி பண்டிகை நாளான மார்ச் 22ம் தேதி, இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்று பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். சூதாட்டத்தில் உமேஷ், மூர்த்தி ஆகியோரிடம் 20 ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டி மோகன் தோற்றுவிட்டார். 

 

பணத்தை இழந்த விரக்தியில் மோகன், அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் அதே கடைக்குச் சென்றனர். அவர்களைப் பார்த்த மோகன், சீட்டாட்டத்தில் தன்னுடைய பந்தய பணத்தை ஜெயித்ததால், அதிலிருந்து தனக்கு மதுபானம் வாங்கி 'டிரீட்' கொடுக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மதுபானம் வாங்கித் தர மறுத்ததோடு, மோகனை ஆபாசமாகப் பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. 

 

அப்போது ஆத்திரம் அடைந்த உமேஷ், மூர்த்தி ஆகிய இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஒளித்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மோகனை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் மோகன் சரிந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். 

 

நிகழ்விடத்தில் இருந்தவர்கள் மோகனை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 23ம் தேதி காலை மோகன் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக உமேஷ், மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.