Skip to main content

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; “ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்” - அரசு தரப்பு வழக்கறிஞர்!

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

 

Govt lawyer says Pollachi case Life sentence should be given

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி (12.02.2019) 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “தனக்கு ஏற்கனவே பழக்கமான சபரிராஜன் என்பவருடன் காரில் சென்ற போது சபரிராஜனுடன் இருந்த திருநாவுக்கரசு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தனர்” எனத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று, ‘பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம்’ ஆகும்.

இளம் பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட இந்த சம்பவத்தினை ‘நக்கீரன்’ இதழ் அம்பலப்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட 8 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சார்பில் 50 சாட்சிகள்; 200 ஆவணங்கள்; 40க்கும் மேற்பட்ட மின்னணு தரவுகள் முக்கிய சாட்சியாக இடம் பெற்றன. இந்த வழக்கின் விசாரணையானது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா (மகளிர்) கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேலும் இந்த வழக்கில் சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு என இருதரப்பு வாதங்களும், அரசு சார்பில் பதில் வாதமும் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி (28.04.2025) முடிவடைந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிபதி நந்தினி தேவி இன்று (13.05.2025)  தீர்ப்பு வழங்கினார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தண்டனை விவரம் 12 மணிக்கு வழங்கப்படும்” என்ற அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடே எதிர்பார்த்திருந்த பரபரப்பான பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் 9 எதிரிகளும் குற்றவாளிகள் என்று அரசு தரப்பில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் வயது, திருமணம் ஆகாதவர்கள், வயதான பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற உடல் நிலை காரணங்களையும் சொல்லி லீனியன்சி கேட்டுள்ளனர். அரசு தரப்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரிதான வழக்கு. பெண்களுக்கு  எதிரான வழக்கில் நீதிமன்றம் கண்டிப்பான ஒரு தீர்ப்பு வழங்க வேண்டும். அதன்படி கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் 376டி என்ற பிரிவின் கீழ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு 376 2என்ற பிரிவின் கீழ் மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்துக்கு உட்படுத்துவது உள்ளிட்ட 2 முக்கியமான அபென்ஸ்ல கன்விஷன் செய்யப்பட்டுள்ளது.

Govt lawyer says Pollachi case Life sentence should be given

எனவே உயர்ந்த பட்ச தண்டனையாகச் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் தெளிவாக மிகவும் அழுத்தமாக உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் கிடைக்கும். அரசு தரப்பில் உயர்ந்த பட்ச தண்டனை வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். நண்பகல் 12 மணிக்குத் தண்டனை விவரங்கள் வழங்கப்படும். மேலும்  எங்களோட வாதத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஒரு முக்கியமான ஒரு அம்சம் என்பதால் அதையும் வந்து உச்ச நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நாங்கள் வந்து முன் வைத்திருக்கிறோம் உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியுள்ளோம். இதனை நீதிமன்றம் பரிசீலனை செய்து 12 மணிக்குத் தண்டனை விவரங்கள் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்